ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விசாரணைக்கு இன்று ஆஜரானார்.

கரூர் மாவட்டம், வாங்கலை சேர்ந்த பிரகாஷ், ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவருக்கு வேண்டியவர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்ததாக அவர், அவரது தம்பி சேகர் உள்ளிட்டோர் மீது கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் 17 பேர் மீது கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கில் ஒரு மாதத்திற்கு மேல் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீஸார் கேரள மாநிலம் திருச்சூரில் வைத்து 2024-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி கைது செய்தனர். அதன் பின் இவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஜாமீன் பெற்றனர்.

கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் இவ்வழக்கு நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் ஜூலை 20-ம் தேதி ஆஜராகி குற்றப்ப த்திரிகை நகலை பெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் மாஜிஸ்ட்ரேட் பரத்குமார் முன்பு இன்று (ஜூலை 27) முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விசாரணைக்கு ஆஜரானார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal