சமீபத்தில் கரூரில் பேசிய விஜய், ‘‘ தீய சக்தியும் தீர்ந்து போன சக்தியும் வேறு வேறு இல்லை. இருவரும் கூட்டுக் களவாணிகள். எங்களுக்குள் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதை நிரூபிக்க முடியுமா.. வரப்போகும் இடைத்தேர்தலில் அதை நிரூபிக்கச் சொல்லுங்கள்’’ என்றார்
விஜய் பேசியது உண்மை என்பதற்கு வலுசேர்க்கும் வகையில், ‘‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எப்போது கோபம் வருகிறதோ, அப்போது தவெக ஆட்சி முடிவுக்கு வரும் என்றும் அவருக்கு கோபம் வர வேண்டும்’’ என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருக்கிறார்.
சிவகாசி சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ‘‘எடப்பாடி பழனிசாமி நம்மைவிட அதிகமாகப் புகழ்ந்தவர்கள் தான் இன்று அதிமுகவிலிருந்து வெளியேறியுள்ளார்கள். அதிமுகவிலிருந்து வெளியே சென்றவர்கள் எல்லாம் மண்ணைக் கவ்வப்போகிறார்கள்.
உங்களை வளர்த்த அதிமுகவிற்கு துரோகம் செய்துவிட்டு சாதாரணத் தொண்டர் சென்றால் அதில் நியாயம் உள்ளது. ஆனால் அதிமுக கட்சியை வைத்து முழுமையாகப் பொருளாதாரத்தைப் பெருக்கிக்கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு துரோகம் செய்துவிட்டுச் சென்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் சிலர் அங்கு சென்று வேஷம் போடுகிறார்கள். மீண்டும் அவர்கள் தாய்க் கழகத்தில் இணையும் காலம் விரைவில் வரும்.
முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்களுடன் அ.தி.மு.க.வினர் த.வெ.க.வில் இணைந்துள்ளதாகக் கூறுவது ஒரு செட்டப். அ.தி.மு.க. உண்மைத் தொண்டர்கள் ஒரு நாளும் கட்சி மாற மாட்டார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று சரித்திரச் சாதனைகளை தவெகாவிற்கு செய்யத் தகுதி உள்ளதா? தவெகவினர் வேஷம் கட்டி ஆடுகிறார்கள், உங்கள் ஆட்டம் முடிவுக்கு வரப் போகிறது.
விஜய் ஒரு மாஸ் நடிகர் என்பதை ஒத்துக்கொள்கிறேன். தேர்தலின் போது விஜய் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை மக்கள் நம்பிவிட்டனர். இதனால் தான் த.வெ.க.வுக்கு கிராமங்களில் அதிகளவில் ஓட்டு கிடைத்தது. தவெகவின் வெற்றி நிலையான வெற்றி கிடையாது. உள்ளாட்சித் தேர்தலில் த.வெ.க.வுக்கு மக்கள் சங்கு ஊதுவார்கள்.
த.வெ.க.வுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்றால் 150 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காட்சிகளை வைத்து ஆட்சி அமைத்துள்ளார்கள். இந்த ஆட்சியை வைத்துக்கொண்டு கரூரில் இந்த ஆட்டமா? மேயராக, துணை முதல்வராக, முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினை கொத்து புரோட்டா போடுவோம் என முதல்வர் விஜய் பேசுவது நியாயமா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் நானும் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்துள்ளேன், அரசியல் ரீதியாக விமர்சனம் செய்துள்ளேன், எங்கள் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதால் பதிலடி கொடுத்துள்ளேன். ஆனால் நான் அவரை அவமானமாகப் பேசியதில்லை. மத யானைக்கு நிகரான திமுகவையே அடக்கி ஆண்டவர்கள் நாங்கள், எங்களைப் பார்த்து தீர்ந்து போன சக்தி எனக் கூறுவதா என தவெகவிற்கு பதிலடி கொடுத்தார். ஆட்களையே பார்க்காமல் வாக்களித்த ஒரே தேர்தல் இந்த தேர்தல்தான்.
எந்த நேரம் மு.க.ஸ்டாலினுக்கு கோபம் வருகிறதோ? அப்போது த.வெ.க. ஆட்சி முடிந்துவிடும், அவருக்கு கோபம் வர வேண்டும், வரும், அதுவரை தவெக ஆட்சி நீடிக்குமா? எனவும் தவெக ஆட்சியை விமர்சித்துள்ளார். த.வெ.க தவிர்க்க வாக்களித்த மக்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்த வாய்ப்புள்ளதால் த.வெ.க ஆட்சி மூன்றாண்டுகள் மட்டுமே நடைபெறும். முதல்வர் பொறுப்பில் உள்ளவர் தார்மீகமாகப் பேச வேண்டும்.
இதற்கு முன்னர் எந்த ஒரு முதல்வரும் விஜய் பேசுவதை போல் யாரையும் வசைபாடியதில்லை. தவறு செய்தால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கட்டும், ஒரு முதல்வரே இப்படிப் பேசுவது பழிவாங்கும் நடவடிக்கை என்பதை காட்டுகிறது. தவெக தலைவர் விஜயின் பேச்சை யாரும் ரசிக்கவில்லை’’ என்றும் தெரிவித்தார்.
