தி.மு.க. கூட்டணியிலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெளியேறுவதாக தவல்கள் வெளியாகியிருக்கிறது. வருகிற ஜூன் 20ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றியை பெற்ற நிலையில், ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி பிடித்தது. அந்த வகையில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் தவெகவிற்கு பல்டி அடித்தது.
மேலும் விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தலா 2 தொகுதிகளோடு தவெகவிற்கு ஆதரவளித்தது மட்டுமில்லாமல் அமைச்சரவையிலும் இடம்பிடித்தது. அதே நேரம் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தது. இதன் காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த திமுக கூட்டணி பிரிந்தது.
இந்த நிலையில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வி அடைவார் என எங்களுக்கு முன்பே தெரியும் என் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘தவெக ஆட்சி அமைக்க முற்பட்ட போது ஆளுநர் மறுப்பு தெரிவித்து வந்தார். இதனையடுத்து ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து நாங்களும் அறிக்கை வெளியிட்டோம். இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் சந்திக்க சென்ற நேரத்தில், வேறு விதமான யோசனையில் இருந்ததாக எனக்கு கூறப்பட்டது. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கிவிட்டு இதற்கு திமுக ஆதரவு கொடுப்பது என முடிவு செய்யப்பட்தாக கூறப்பட்டது.
இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது தொடர்பாக இரவு பகலாக ஆலோசித்து கொண்டிருந்தோம். கேரளாவில் இருந்து தவெகவிற்கு ஆதரவு கொடுங்கள் என கூறினார்கள். அடுத்த நாள் தவெக முக்கிய தலைவர்கள் வந்து ஆதரவு கேட்டார்கள். அப்போது நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம். நீங்கள் எங்களிடம் வந்ததற்கு திமுகவிடம் சென்று கேட்டிருக்கலாமே என கூறினோம்.
அடுத்ததாக தவெக தலைவர் விஜய் நேரடியாக வருவதாக தெரிவித்தனர். ஆனால் இது சரியில்லையென அலுவலகத்தில் இருந்து புறப்பட்டோம். திமுக அலுவலகத்திற்கு சென்ற போது திருமாவளவனை முதலமைச்சராக்குவோம் என பேச்சு எழுந்தது. இது எப்படி சரியாக இருக்கும், அவர் தான் முதலமைச்சர் இல்லையே என கேள்வி எழுப்பினோம். 6 மாத காலத்திற்குள் எம்எல்ஏவாக தேர்வு செய்யலாம் என தெரிவித்தார்கள்.
இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மக்கள் ஓட்டு போட்டு ஒரு கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என முடிவு செய்தார்கள். அப்படி இருக்கும் போது ஆளுநரிடம் சென்று விஜய் ஆட்சி அமைக்க முடியாது என தெரிவித்திருந்தால் அடுத்தக்கட்ட முடிவு தொடர்பாக பேசியிருக்கலாம். ஆனால் அவரை அழைக்காமல் இப்படி செய்வது சரியில்லை என்ற காரணத்தால் முஸ்லிம் லீக் உயர்நிலைக்குழு கூட்டத்தை கூட்டி ஆலோசித்து தவெகவிற்கு ஆதரவை தெரிவித்தோம்’’ என்றார்.
கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘‘கொளத்தூர் தொகுதியில் முஸ்லிம் லீக் மகளிர் அணி வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்தனர். அப்போதே என்னிடம் மகளிர் அணியினர் வந்து தெரிவித்தார்கள். கொளத்தூரில் ட்ரெண்ட் வேறு போல் உள்ளது. வீடுகளில் உள்ள பெண்கள் எல்லாம் வேறு மாதிரி பேசுகிறார்கள் என என்னிடம் தெரிவித்தனர்.
இதை திமுக வட்டாரத்தில் சொல்லியிருப்பதாகவும் கூறினார்கள். ஏதோ மாற்றம் வருவது போல பேசிக்கொண்டிருக்கிறார்கள். பெண்கள் மத்தியில் திமுகவிற்கு ஓட்டு போடுவார்களா.? என சந்தேகம் இருப்பதாகவும் கூறினார்கள். நாங்களும் இதனை திமுக தலைமையிடம் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் என தெரியவில்லை என கூறினார். இந்த நிலையில் திமுக கூட்டணியில் தொடர்வதா என்பது குறித்து வருகிற 20ஆம் தேதி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்’’என காதர்மொய்தீன் தெரிவித்தார்.
தற்போது, த.வெ.க. அரசுக்கு ஆதரவளித்ததோடு, அமைச்சரவையிலும் இடம்பெற்றிருக்கிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்! ஜூன் 20-ல் நடைபெறும் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் தி.மு.க. கூட்டணியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவிப்பு வெளியாக இருக்கிறது என்கிறார்கள்.
