‘2021ல் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் ஒரே நாளில் நிறைவேற்றவில்லை. 5வது ஆண்டில் தான் அதிகமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது. அதனை என்னால் உறுதியாக சொல்ல முடியும். இதனால் ஆளும் கட்சிக்கு உரிய காலஅவகாசத்தை தர வேண்டும்’ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சண்முகம் கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சண்முகம் கூறியுள்ளதாவது: ”தேர்தல் முடிவுகள் வந்தவுடன் மே 5ம் தேதி ஸ்டாலினை அறிவாலயத்தில் போய் சந்தித்தோம். திருமாவளவன் (விசிக தலைவர்), வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர்) என நாங்கள் எல்லோரும் தான் சென்றோம்.

இந்த சந்திப்பின்போது சிறப்பாக ஆளும் கட்சியாக இருந்தோம். இனி சிறப்பான எதிர்க்கட்சியாக இருப்போம் என்று ஸ்டாலின் ரிசல்ட் வந்த 4ம் தேதி மாலையில் கூறியிருந்தார். இந்த அறிவிப்புக்கு அவருக்கு பாராட்டு தெரிவிக்க சென்றோம். அப்போது அவர், ‘அண்ணன் நேற்று 4ம் தேதி மாலையில் நான் என்ன சொன்னேனோ அதுதான் திமுகவின் நிலைப்பாடு. சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று கூறினேன். அதுதான் திமுகவின் நிலைப்பாடு. ஒரு 6 மாத காலம் போகட்டும். எப்படி ஆட்சி நடத்துகிறார் (விஜய் ஆட்சி) என்று பார்ப்போம் . அதன்பிறகு ஆட்சியில் உள்ள குறைகள், குற்றங்களை சுட்டிக்காட்டி நம்முடைய நடவடிக்கைகளை தீர்மானிப்போம்” என்று தான் 5ம் தேதி காலையில் கூறினார்.

இந்த தேர்தலில் முதலமைச்சரே (ஸ்டாலின்) தோற்றுவிட்டார். இது ரொம்ப வருத்தம் தான். ஒரு கட்சி தோற்கிறது வேறு விஷயம். அதேபோல் ஒரு தொகுதிக்கு நல்லது செய்தால் வெற்றி பெற்றுவிடுவார்கள் என்று யாரும் கூறினால் நம்ப வேண்டாம். ஏனென்றால் கொளத்தூர் தொகுதியை ஒரு எம்எல்ஏவாக அவ்வளவு செய்துள்ளார். சென்னையில் பீச், எம்ஜிஆர் சமாதி செல்வது போல் கொளத்தூர் தொகுதிக்கு சென்று வாருங்கள். அப்படி பார்த்தால் தெரியும். கொளத்தூர் தொகுதிக்கு எந்த அளவுக்கு நம்முடைய முன்னாள் எம்எல்ஏ (ஸ்டாலின்) செய்துள்ளார் என்று உங்களுக்கு தெரியும்.

இதனால் அவரை விட தொகுதிக்கு நல்லது செய்தேன் என்றால் யாரும் நம்ப வேண்டாம். அதேவேளையில் மக்கள் நினைத்தால் எவ்வளவு செய்தாலும் தூக்கி வீசி விடுவார்கள் என்பதற்கு கொளத்தூர் ஒரு உதாரணம். அவருக்கு வருத்தம் தெரிவிக்க சென்றோம். ஏனென்றால் அவரை போன்றோர் எல்லாம் சட்டசபையில் இருக்க வேண்டும். அப்போது இப்போது ஆள்பவர்களை நெறிப்படுத்துவதற்கும், மக்களுக்கான திட்டங்களை வகுப்பதற்கும் உதவிகரமாக இருந்திருக்கும். முக ஸ்டாலின் தோற்றது உண்மையிலேயே வருத்தம். ஆனால் ஸ்டாலின் தெரிவித்ததற்கும், இப்போது திமுகவினர் வெளிப்படுத்தும் கருத்துகளுக்கும் சம்பந்தமே இல்லாமல் உள்ளது.ஒவ்வொன்றிலும் பொய் சொல்கிறார்கள். ஒவ்வொன்றிலும் குற்றம் கண்டுபிடிக்க கூடிய காரியத்தை செய்கின்றனர். அவர்களின் தொண்டர்கள், தலைவர்கள் இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் ஸ்டாலின் சொன்னது வேறு. கடந்த முறை முக ஸ்டாலின் முதல் முறையாக முதல்வரானார். நிதானமாக, பொறுமையாக செயல்பட்டார். கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் ஒரே நாளில் நிறைவேற்றவில்லை. 5வது ஆண்டில் தான் அதிகமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது. அதனை என்னால் உறுதியாக சொல்ல முடியும். இதனால் ஆளும் கட்சிக்கு உரிய காலஅவகாசத்தை தர வேண்டும்” என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal