தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் பெரும்பாலும் திமுக ஆட்சியைத் தக்க வைக்கும். புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஆட்சி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை பல்வேறு நிறுவனங்களின் கணிப்பில் பெரும்பாலும் திமுக ஆட்சியைத் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக என்டிடிவி, ரிபப்ளிக் டிவி,சாணக்கியா ஸ்ட்ராடஜிஸ், கருத்துக் கணிப்பின்படி திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பெறும் எனவும், டைம்ஸ் நவ், வோட் வைஃப், சிஎன்என், ஸ்பைக் மீடியா கணிப்பில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் எனவும், இந்தியா டுடே முடிவுகளில் தவெக முன்னிலை வகிக்கும் என்றும், காமாக்யா கணிப்பில் தொங்கு சட்டப் பேரவைக்கான வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே கருத்துக்கணிப்புகள் பல நிறுவனங்கள் வெளியிட்டாலும், துல்லியமாக எந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது என்ற அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டோம். அதில் தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து 2 நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகள் முடிவுகளோடு ஓரளவு ஒத்துப்போகியிருக்கிறது.

1991ல் இருந்து அ.தி.மு.க., தி.மு.க. என மாறி மாறிதான் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. 2016 சட்டமன்றத் தேர்தலில்தான் எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. இரண்டாவது முறையாக வெற்றி பெற்றது. 2016 சட்டமன்றத் தேர்தலை எந்த நிறுவனம் ஓரளவிற்கு கணித்திருக்கிறது என்பதை பார்ப்போம்..!
2016-க்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்:
இந்தியா டுடே -ஆக்சிஸ் கருத்துக் கணிப்பு
அதிமுக+ : 89 -101
திமுக+ : 124 – 140
மக்கள் நலக்கூட்டணி : 4 – 8
பாஜக : 0 – 3
ஏபிபி – நீல்சன் கருத்துக்கணிப்பு
அதிமுக : 95
திமுக : 135
மற்றவை : 7
டைம்ஸ் நவ் தொலைக்காட்சி – சிவோட்டர் கருத்துக் கணிப்பு
அதிமுக : 139
திமுக : 78
மக்கள் நலக்கூட்டணி : 15
நியூஸ் நேஷன் கருத்துக்கணிப்பு
அதிமுக : 95 -99
திமுக : 114 – 118
மக்கள் நலக்கூட்டணி : 12 – 16
பாஜக : 0-1
மற்றவை : 5 – 9
நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பு
அதிமுக : 81 -99
திமுக: 129 – 151
மற்றவை : 2 – 6
ஸ்பைக் மீடியா கருத்துக் கணிப்பு
அ.தி.முக :142
தி.மு.க. : 87
ஆனால், பெரும்பாலான கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக அதிமுக 135 இடங்களிலும், திமுக கூட்டணி 97 இடங்களிலும் வெற்றிபெற்றது. 234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவே தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, சில சிறிய கட்சிகளை கூட்டணி சேர்த்துக்கொண்டு 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. மக்கள் நல கூட்டணியில் தேமுதிக, தமாகா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றன. இதுதவிர பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்து போட்டியிட்டன.
தேர்தல் முடிவுகளின்படி அதிமுக 134 இடங்களிலும், திமுக 89 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 இடத்திலும் வென்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி ஓர் இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அதுபோல பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி போன்றவையும் ஓர் இடத்திலும் வெற்றிபெறவில்லை.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலோடு 2026 சட்டமன்றத் தேர்தல் எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகளை ஒப்பிடும் போது, அதாவது ஆட்சி மாறி மாறி வந்த நிலையில் மீண்டும் அ.தி.மு.க.வே ஆட்சியைப் பிடித்த நிலையில் டைம்ஸ் நவ் & சிவோட்டர்ஸ் மற்றும் ஸ்பைக் மீடியா என இரண்டு நிறுவனங்கள் கணித்த கணிப்புகள் ஓரளவு முடிவுகளோடு ஒத்துப்போயிருந்தது. தற்போது, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கும் என இந்த இரண்டு நிறுவனங்களும் எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டிருக்கிறது.
தவிர, கடந்த முறை டைம்ஸ் நவ் சி வோட்டர்ஸுடன் இணைந்து நடத்தியிருந்தது. இந்த முறை ஜே.வி.சி. என்ற நிறுவனத்துடன் இணைந்து நடத்தியிருக்கிறது.
எனவே, மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். நேற்றைக்கு எடப்பாடி பழனிசாமியும் ‘கருத்துக்கணிப்புகளை நம்பவேண்டாம்’ என அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே, 2026ல் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என இன்னும் இரண்டு நாட்கள் கழித்து தெரியவரப்போகிறது. அதுவரை பொறுமையாக இருப்போம்..!
