தமிழகத்திற்கு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகின்றன.
திமுக தனது கூட்டணியில் இருக்கும் பெரிய கட்சியான காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நிறைவு செய்தது. தொடர்ந்து காங்கிரஸ் அதிக இடங்களை கேட்டு முரண்டு பிடித்து வந்த நிலையில், மூத்த நிர்வாகிள் திமுகவுடன் இணைந்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதில் உறுதியாக இருந்தனர்.
இதையடுத்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் வழங்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத்தொடர்ந்து தற்போது கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது திமுக. அண்மையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தேர்தல் பார்வையாளர் முகுல் வாஸ்னிக் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையில், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திமுக கூட்டணியில் 28 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் நிர்வாகிகளுடன் முக்கிய விவாதம் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சி ஏற்கனவே சிட்டிங் எம்.எல்.ஏக்களாக உள்ள தொகுதிகள் அத்தனையையும் மீண்டும் எதிர்பார்க்கிறது. அதாவது காங்கிரஸ் கட்சி தற்போது சிட்டிங் எம்.எல்.ஏக்களாக உள்ள 17 தொகுதிகளையும், கூடுதலாக தங்களுக்கு சாதகமான 11 தொகுதிகளையும் லிஸ்ட் போட்டுள்ளது காங்கிரஸ் கட்சி. மதுரை வடக்கு உள்ளிட்ட சில தொகுதிகளை காங்கிரஸ் கட்சியின் சில முக்கிய நிர்வாகிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி, 42 சீட்களை தேர்வு செய்து, அதில் 28 தொகுதிகளை பெற திட்டமிட்டுள்ளது. அதில் திமுக ஸ்ட்ராங்காக உள்ள சீட்களும் அடக்கம். திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டின்போது சீட் நம்பர் இறுதி செய்வதிலேயே இழுபறி நடந்து வந்த சூழலில், எந்தெந்த தொகுதிகள் என்பதை அடையாளம் காண்பதிலும் சிக்கல் ஏற்படும் நிலை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் விரும்பும் 28 தொகுதிகளை அடையாளம் காண 42 தொகுதிகள் அடங்கிய பட்டியலை தயார் செய்ய வேண்டும் என காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் முடிவு எடுத்துள்ளனர். திமுக போட்டியிட விரும்பும் சில தொகுதிகளை, காங்கிரஸ் தரப்பும் தங்களுடைய பட்டியலில் சேர்த்துள்ளதாக கூறப்படும் நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை. அப்போது, சட்டசபை தேர்தலில் திமுக, காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது.
காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகள் போட்டியிட போகிறது. கடந்த தேர்தலில் போட்டியிட்டவர்க்ளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா அல்லது புதியவர்கள் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, இப்போது தான் எல்லா கட்சிகள் உடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தொகுதிப் பங்கீடு உடன்பாடும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் முடிந்த பிறகு எந்தெந்த தொகுதி என்பது அடையாளம் காணப்படும். அதற்குப் பிறகு உங்களிடம் தெரிவிப்போம் என்று பதிலளித்தார்.
