டெல்லியில் மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றமற்றவர் என்று மதுபானக் கொள்கை தொடர்பான அனைத்து வழக்குகளிலிருந்தும் அவரை நீதிமன்றம் விடுவித்தது.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மூத்த தலைவரும் மாஜி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா மற்றும் மேலும் 21 பேரைக் குற்றமற்றவர்கள் என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. சிபிஐ தொடர்ந்த இந்த வழக்கில் இருந்து அனைவரையும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம் விடுவித்தது.
சிபிஐ குற்றப்பத்திரிகையில் ஆதாரமற்ற பல குறைபாடுகள் உள்ளதாக நீதிமன்றம் கூறியது. குறிப்பாக மதுபானக் கொள்கையை உருவாக்கியதில் சதியோ அல்லது குற்ற நோக்கமோ இல்லை எனவும் தன் தீர்ப்பில் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இந்த வழக்கு இதுவரை கடந்து வந்த பாதையை நாம் பார்க்கலாம்!
2023 அக்டோபர்: டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு முதல் சம்மனை அனுப்பியது
நவம்பர் 2, 2023: அமலாக்கத் துறை சம்மனைத் தவிர்த்த கெஜ்ரிவால், மத்தியப் பிரதேசத்தில் அரசியல் கூட்டத்தில் பங்கேற்றார்.
டிசம்பர் 2023- அமலாக்கத் துறையின் 2வது சம்மனையும் கெஜ்ரிவால் புறக்கணித்தார். இந்த சம்மன் சட்டவிரோதம் என்றும் அரசில் பழிவாங்கல் என்றும் தெரிவித்தார்.
ஜனவரி 2024 = 3வது மற்றும் 4வது சம்மனுக்கும் ஆஜராகாத கெஜ்ரிவால், தனது ஆட்சிக்கு எதிராகச் சதி நடப்பதாகத் தெரிவித்தார்.
பிப்ரவரி 2, 2024- 5வது சம்மனுக்கும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. அனைத்துச் சம்மன்களையும் சட்டவிரோதம் என்று கெஜ்ரிவால் வழக்கறிஞர் தெரிவித்தார்.
மார்ச் 16, 2024- சம்மன்களுக்கு ஆஜராகவில்லை எனச் சொல்லி அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கைத் தொடர்ந்து இருந்தது. அந்தவழக்கில் நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது.
மார்ச் 21- அமலாக்கத்துறை சம்மன்களை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் மறுத்தது. அதே நாளில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
மார்ச் 21- அதே நாளில் ஒன்பது அமலாக்கத்துறை சம்மன்களைத் தவிர்த்த கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இடையில் ஜாமீன் கேட்டு அவர் வழக்கு தொடர்ந்தார்
மே 10, 2024- மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது.
ஜூன் 2- தேதி உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அவர் திகார் சிறையில் சரணடைந்தார்.
ஜூன் 5- மருத்துவக் காரணங்களுக்கான இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஜூன் 20 – பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு அதே நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஜூன் 21- ஆனால் மறுநாளே அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்ததால், டெல்லி உயர் நீதிமன்றம் அவரது விடுதலையைத் தடுத்து நிறுத்தியது.
ஜூன் 26, 2024- மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கெஜ்ரிவாலை கைது செய்தது.
செப்டம்பர் 5- கெஜ்ரிவால் ஜாமீன் மனுக்கள், கைது நடவடிக்கைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.
செப்டம்பர் 13, 2024- உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
பிப்ரவரி, 2025- டெல்லியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. 70 தொகுதிகளில் 48ல் வென்று பாஜக ஆட்சியைப் பிடித்தது. ஆம் ஆத்மி 22 தொகுதிகளில் மட்டுமே வென்றது. அக்கட்சித் தலைவர் கெஜ்ரிவால் கூட தோல்வி அடைந்தார். இந்த மதுபானக் கொள்கை வழக்கு தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜனவரி 22, 2026- அமலாக்கத்துறையின் இரண்டு வழக்குகளில் இருந்து டெல்லி நீதிமன்றம் கெஜ்ரிவாலை விடுவித்தது.
பிப்ரவரி 27, 2026- டெல்லி நீதிமன்றம் கெஜ்ரிவாலை குற்றமற்றவர் என அறிவித்து, மதுபானக் கொள்கை தொடர்பான அனைத்து வழக்குகளிலிருந்தும் அவரை விடுவித்தது.
