த.வெ.க.வை தனித்துப் போட்டியிட வைத்து அதன் மூலம் தி.மு.க. வெற்றி பெறுவதற்கான வியூகத்தை வகுப்பதற்காக தி.மு.க.வால் த.வெ.க.விற்கு அனுப்பப்பட்டவர்தான் ஆதவ் அர்ஜுனா என அவரது மைத்துனர் சார்லஸ் மார்ட்டின் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளராக செயல்பட்டு வருபவர் ஆதவ் அர்ஜுனா. தவெகவில் இணைவதற்கு முன்பாக விசிகவில் துணை பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்த ஆதவ் அர்ஜுனா, கூட்டணியில் இருந்து கொண்டே திமுகவை விளாசினார். இதனால் திமு.க. & விசிக கூட்டணியில் விரிசல் ஏற்படுத் நிலைமை ஏற்பட்டதால், வி.சி.க.வில் இருந்து ஆதவ் அர்ஜுனா தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
இதன்பின்னரே தவெகவில் ஆதவ் அர்ஜுனா இணைந்தார். இதன்பின் முழுக்க முழுக்க திமுகவை அட்டாக் செய்து வரும் ஆதவ் அர்ஜுனா, பிரபல தொழிலதிபரான லாட்டரி மார்ட்டினின் மருமகன். இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா குறித்து லாட்டரி மார்ட்டினின் மகன் சார்லஸ் மார்ட்டின் பேசியுள்ள கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மார்ட்டினின் மகனும், ஆதவ்வின் மைத்துனருமான சார்லஸ் மார்ட்டின் பேசுகையில், ‘‘ஆதவ் அர்ஜுனா எங்கள் குடும்பத்திற்குள் வந்ததும் தொழிலை கைப்பற்ற வேண்டும் என்று முயற்சித்தார். எங்களின் அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்ற முயற்சிகள் மேற்கொண்டார். இதனால் எங்களுக்கு இடையில் முரண்பாடு வந்தது.
இதற்காக முதலில் குடும்பத்திற்கு சண்டையை உருவாக்கினார். அவரால் நானும், என் தந்தையும் 2 ஆண்டுகள் பேசாமல் இருக்க வேண்டிய நிலை வந்தது. அதன்பின் வியூக வகுப்பாளராக திமுகவிற்கு சென்றவர், முதல்வர் ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசனுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்த முயன்றார். குடும்பத்திற்குள் பிரச்சனையை உருவாக்க நினைத்த அவர், ஒரு கட்டத்தில் திமுகவை கையில் எடுக்க வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கினார்.
இதனால் அவரை ஸ்டாலின் குடும்பத்தினர் வெளியேற்றினர். அங்கிருந்து விசிகவுக்கு சென்ற அவர், திருமாவளவன் மீறியும், விசிகவை மீறியும் செயல்பட தொடங்கினார். அவரின் முடிவுக்கு கட்சி செயல்பட வேண்டும் என்று நினைத்தார். இதனை புரிந்து கொண்டு, விசிகவில் இருந்து திருமாவளவன் வெளியேற்றினார்.
தற்போது தவெகவில் இணைந்துள்ளார். அங்கும் ஆதவ் அர்ஜுனா தன்னையே முன்னிலைப்படுத்தி வருகிறார். ஜான் ஆரோக்கியசாமியையும், ஆதவ் அர்ஜுனாவையும் தவெகவிற்கு அனுப்பியதே திமுக தான். தவெக எந்த கூட்டணியிலும் சேராமல் தனியாக இருக்கும்படி பார்த்து கொள்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டவர் தான் ஆதவ் அர்ஜுனா. விஜய் வேறு கூட்டணிக்கு செல்லாமல் இருந்தாலே, மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்பதே திமுகவின் கணக்கு’’ என்றும் தெரிவித்துள்ளார் மார்ட்டின்.
‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்பார்கள். ஆனால், விஜய் எதையும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. தனது தந்தையை விட வியூகம் வகுத்துக்கொடுக்க அவருக்கு வேறு நபர்கள் தேவையா?
ஆதவ் அர்ஜுனாவின் உண்மை முகம் தெரிந்த பிறகும், அவரைப் போன்றவர்களை விஜய் வைத்துக்கொண்டால் அரசியல் மட்டுமல்ல சினிமாத்துறையிலும் அவருக்கு எதிர்காலம் என்பது எட்டாக்கனியாகிவிடும்!
