‘‘திமுகவில் இருப்பவர்களை குறி வைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டது. அதில் முதல் பலி நான் ஆகிவிட்டேன்’’ அமைச்சர் என திருவாரூரில் நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பிலான பாக நிலை முகவர்கள் மற்றும் பிடிஏ முகவர்களுக்கான மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. இதில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே என் நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாக்குச்சாவடி பாக நிலை முகவர்கள் மற்றும் டிஜிட்டல் முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் வாக்காளர்கள் தொடர்பான சரியான தரவுகளை எவ்வாறு உறுதி செய்வது..? பிஎல்ஏ 2 மற்றும் பிடிஏ ஆகியோரின் குறிக்கோள்கள் மற்றும் பொறுப்புகள் என்னென்ன…? வாக்காளர் பட்டியல் திருத்தம் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 92 வயதான திமுக மூத்த முன்னோடி சுப்பிரமணிய பிள்ளை நேற்று மறைந்ததை ஒட்டி அவருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து பாக நிலை முகவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் கே என் நேரு, ‘‘வாக்காளர் பட்டியலை சரியாக செய்தோம் என்றால் நமக்கு பாதி வெற்றி உறுதி செய்யப்பட்டது. திமுக கூட்டணியில் இருப்பவர்கள் வெளியே சென்றுவிடுவார்கள் என எடப்பாடி பழனிச்சாமி கூறினார். ஆனால் நமது கூட்டணியில் இருந்து இதுவரை யாரும் வெளியே செல்லவில்லை. ஆனால் அவருடன் இருப்பவர்களில் பாமக இரண்டாக பிரிந்து விட்டது. தேமுதிக வெளியேறிவிட்டது. சின்னம்மா, டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் என பல பிரிவுகளாக பிரிந்திருக்கிறார்கள். அவர்கள் தான் செதில் செதிலாக பிரிந்திருக்கிறார்கள். நாம் அப்படியேதான் ஒற்றுமையாக இருக்கிறோம். தளபதியை மீண்டும் இரண்டாவது முறையாக முதல்வராக உருவாக்கி ஆட்சி கட்டிலில் அமர வைப்பது தான் நமது கடமை.
இரண்டாவது முறையாக தமிழக முதல்வராக முக ஸ்டாலினை பதவி ஏற்க வைப்பது அவருக்காக அல்ல, கழகத்திற்காக அல்ல, நம்முடைய நன்மைக்காக, பொது மக்களின் நன்மைக்காக. நமது ஆட்சியில் பொதுமக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த உதவிகள், நலத்திட்டங்கள் தொடர்ந்து கிடைப்பதற்கு தான். திமுகவில் இருக்கும் ஒவ்வொருவரையும் குறி வைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டது. அதில் முதல் பலி நானாகி விட்டேன். எது வந்தாலும் நிற்போம் அதில் எந்தவித மாற்றமும் இல்லை. அடிக்க அடிக்க பந்து மாதிரி எழுந்திருக்க வேண்டுமே. தவிர விட்டு விட்டு போகக் கூடாது’’ என்றார்.
