‘பாமகவின் தலைவராக அன்புமணியே தொடர்வார் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் வெளியிட்டுள்ளது. அதே போல் வேட்பாளர்களுக்கு ‘பார்ம் ஏ மற்றும் பார்ம் பி’யில் கையெழுத்திடும் அதிகாரம் அன்புமணிக்கு வழங்கப்பட்டிருக்கிறது’ வழக்கறிஞர் பாலு தெரிவித்திருக்கிறார்.

பாமகவில் யாருக்கு அதிகாரம்? என்பது தொடர்பாக தந்தை மகன் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இருதரப்பும் பொதுக்குழு கூட்டங்களை நடத்தியதோடு, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி இருந்தது.

இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான பாலு சென்னை தியாகராய நகர் திலக் தெருவில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்: ‘‘கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் கடிதம் வழங்கியுள்ளது. இந்த கடிதத்தின் வாயிலாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக மருத்துவர் அன்புமணி தொடர்வார் என இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த கடிதத்தின் மூலமாக அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி வரை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணியும், பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும், பொருளாளராக திலகபாமாவும் தொடர்வார்கள்.

மற்ற நிர்வாகிகள், பொறுப்பாளர்களும் அந்த பொறுப்பில் அப்படியே தொடர்கிறார்கள் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் கொடுத்துள்ளது. சமீபகாலமாக பாமகவில் சில குழப்பங்கள் நீடித்து வந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த கடிதத்தின் வாயிலாக தீர்வு கிடைத்துள்ளது. மேலும் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய தலைமை அலுவலகம் இனி சென்னை தியாகராய நகர் திலக் தெருவில் உள்ள இந்த இடம்தான் தலைமை அலுவலகம் என்பதையும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அங்கீகரித்து இருந்தது.

மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போட்டியிடக் கடிய வேட்பாளர்களுக்கு பாமகவின் சின்னமான மாம்பழம் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியும். பாமக சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களுக்கு கி பார்ம், ஙி.பார்ம் கையொப்பமிடும் அனுமதியும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கே தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. டாக்டர் ராமதாஸ் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை அதே நேரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாசை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டும்தான் கட்சியினுடைய கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த முடியும் மற்றவர்கள் பயன்படுத்தக் கடாது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் லட்சியங்களையும், நோக்கங்களையும் அன்புமணி தலைமையில் நிறைவேற்றுவோம். இனி வரும் காலங்களில் பாமகவில் இரண்டு அணி என்று சொல்லுவது தவறானது. இனி பாமகவில் தனித்தனி அணிகள் எதுவும் கிடையாது ஒரே அணி தான் அது டாக்டர் அன்புமணி தலைமையிலான பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் மட்டும்தான் பாமகவை சேர்ந்தவர்கள். பாமகவில் ஏற்பட்ட சிறு குழப்பத்தின் காரணமாக இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்தனர்.

இந்த கடிதத்தின் வாயிலாக அவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம். பாமகவை மேலும் வலிமையாக்க ஒதுங்கி இருப்பவர்கள், விலகி நிற்பவர்கள் டாக்டர் அன்புமணியின் தலைமையை ஏற்று இந்த பக்கம் வரவேண்டும் எனவும் பாலு அழைப்பு விடுத்தார். பாமகவின் கொடியை, சின்னத்தை மற்றவர்கள் பயன்படுத்தினால் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற கேள்விக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியையும் சின்னத்தையும் அன்புமணி தலைமையிலான நிர்வாகிகள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்.

கட்சிக்குச் சம்பந்தம் இல்லாத மற்றவர்கள் பயன்படுத்துவது தவறு. பாமக தற்போது அங்கீகாரத்தை இழந்த கட்சியாக இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட முடியுமா என்ற கேள்விக்கு, பாட்டாளி மக்கள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்து தற்போது அங்கீகாரத்தை இழந்து இருக்கிறது. எனவே தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் வழங்க அதிகாரம் இருக்கிறது. அந்த அடிப்படையிலேதான் சின்னத்தையும் இந்த அங்கீகாரக் கடிதத்தையும் வழங்கி இருக்கிறார்கள்’’ என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal