‘அ.தி.மு.க.வில் இணைவதற்கு எந்த நிபந்தனையும் ஓ.பி.எஸ். விதிக்கவில்லை’ என்று சீனியர் தலைவர்கள் கூறிவந்த நிலையில், ‘பொதுச் செயலாளர் விவகாரம்’ முடிவுக்கு வரவேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பி.எஸ். செக் வைத்திருப்பதுதான் இணைப்பு சாத்தியமான என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியிருக்கிறது.
அண்ணாதுரையின் பிறந்த நாளையொட்டி, சென்னையில் அவரது சிலைக்கு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பிறகு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய ஓ.பி.எஸ்., ‘‘ 30 ஆண்டுகாலம் ஆளுகின்ற பொறுப்பை தமிழக மக்களிடம் பெற்று நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு என்ன வேண்டுமோ, அதைத்தான் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தங்களின் பொற்கால ஆட்சியில் தமிழக அரசின் சொந்த வருவாயில் செய்து கொடுத்தனர். அந்த சாதனை மீண்டும் திரும்ப வேண்டும் எனில், பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் ஒருங்கிணைந்தால் தான் சாத்தியமாகும் என்று மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தொண்டர்கள் மற்றும் மக்களின் உணர்வுகளை மதித்து அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று அண்ணா பிறந்த நாளில் சபதம் ஏற்போம்’’ என்றார்.
சசிகலா, ஓபிஎஸ், தினகரன் முதலில் ஒன்றிணையட்டும் என்று வளர்மதி கூறியது பற்றிய கேள்விக்கு; ‘‘எம்ஜிஆரின் இயக்கம் இந்த எந்த வழியில் சென்றால் நல்ல வழியாக இருக்கும் என்று கட்சியின் விதிகளை உருவாக்கிக் கொடுத்தார். அந்த விதிகளைத் தான் இருபெரும் தலைவர்கள் 50 ஆண்டுகள் நடைமுறைப்படுத்தினார். அந்த சட்ட விதிகளுக்குத் தான் ஊறு விளைவிக்கப்பட்டுள்ளது. சாதாரண தொண்டனும் கூட பொதுச்செயலாளர் ஆகலாம் என்ற சட்டவிதியும் இருந்தது. அந்த விதியை இன்றைக்கு காற்றிலே பறக்கவிட்டு விட்டார்கள்.
நீதிமன்றத்தில் வழக்கும் இருக்கிறது. அந்த வழக்கு முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். அதன் அடிப்படையில் கட்சி ஒன்றிணைய வேண்டும். நீங்கள் சொல்லும் தலைவர்கள் இணையவில்லை என்றால், தொண்டர்கள் இணைந்து கட்சியை காப்பாற்றுவார்கள். செங்கோட்டையனிடம் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். அவரும் என்னுடன் தொடர்பில் இருந்து கொண்டு தான் இருக்கிறார். சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை சந்திக்க வாய்ப்பு உள்ளது. நயினார் நாகேந்திரனிடம் நான் பேசினேன். இருவரும் விரைவில் சந்திப்போம்’’ என்றார்.
மீண்டும் பாஜ கூட்டணிக்கு செல்ல வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, ‘‘ நான் ஏற்கனவே சொல்லி விட்டேன். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்’’ என்றார்.
திருச்சியில் எம்ஜிஆர் சிலையை விஜய் வணங்கி விட்டு பிரசாரத்தை தொடங்கியது பற்றிய கேள்விக்கு, ‘‘ அரசியலில் வந்தவர்களும் சரி, இனிமேல் வரப் போகிறவர்களும் சரி, அனைவரும் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தாரக மந்திரத்தை தான் சொல்லியாக வேண்டும். அப்போது தான் அவர்கள் வெற்றி பெற முடியும்’’ என்றார்.
அடுத்த கேள்விதான் முக்கியம், முதல்வர் வேட்பாளரில் இருந்து இபிஎஸை மாற்றினால் தான் கூட்டணி என்று டிடிவி தினகரன் நிபந்தனையைப் போன்று நீங்கள் ஏதேனும் நிபந்தனை வைத்துள்ளீர்களா? என்ற கேள்விக்கு; ‘‘பொதுச்செயலாளர் பதவி உள்பட தலைவர்கள் வகுத்த சட்டவிதி அப்படியே உருமாறாமல் நிலைத்து நிற்க வேண்டும் என்று தான் நீதிமன்றத்திற்கே சென்றுள்ளோம். அது நடந்தால், எல்லாம் சாத்தியப்படும்’’ என்றார்.
பொதுச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி எப்படி விட்டுக்கொடுப்பார்? அப்படியானால் இணைப்பு சாத்தியமே இல்லை என்கிறார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்!