கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பிஸியாக இருந்தாலும், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி மற்றும் தொகுதிகள் அ.தி.மு.க. & பா.ஜ.க. இடையே முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இது பற்றி டெல்லி மேலிட வட்டாரத்தில் பேசினோம்.

‘‘அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டபிறகு நேற்று முதன் முதலாக டெல்லி சென்றதும், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது. தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையுடன் உரசல் ஏற்பட்டிருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி-அமித்ஷா சந்திப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மற்ற கட்சிகளும் ஆவலுடன் உற்று நோக்கின. மத்திய மந்திரி அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

தமிழக அரசியல் நிலவரம், பாராளுமன்ற தேர்தல், கூட்டணி, தொகுதி பங்கீடு என்று எல்லா விஷயங்களையும் அவர்கள் அலசி ஆராய்ந்தனர். இதுபற்றி டெல்லி வட்டாரம் மூலம் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி முதலில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றிதான் பேசப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது. அ.தி.மு.க.-&பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. தே.மு.தி.க. உள்பட அனைத்து கட்சிகளையும் இடம்பெற செய்ய வேண்டும் என்பதில் அமித்ஷா உறுதி பட தெரிவித்துள்ளார். இதைக் கேட்டதும் எடப்பாடி பழனிசாமி அதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால் தொகுதி பங்கீடு பற்றி பேச்சு வந்தபோது தான் சற்று நெருடல்கள் ஏற்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு பாதி தொகுதியும், மீதமுள்ள கூட்டணி கட்சிகளுக்கு பாதி தொகுதியும் என்று தொகுதி பங்கீடு செய்து கொள்ளலாம் என்று

அமித்ஷா தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து இதற்கு சம்மதம் தெரிவிக்கப் படவில்லை. அதற்கு பிறகு எடப்பாடி தரப்பிலும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். அமித்ஷா தொடர்ந்து பேசுகையில், ‘அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 20 தொகுதிகளை தாருங்கள். அதை நாங்கள் பிரித்து கொள்கிறோம். அதில் பா.ஜ.க. எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதையெல்லாம் நாங்கள் தீர்மானித்து கொள்கிறோம்’ என்று கூறி இருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒருவருடம் இருந்தாலும், முன்கூட்டியே தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்கிறார்கள். அதனால்தான், ‘எந்தெந்த தொகுதிகளை தருவீர்கள் என்பதை முன்கூட்டியே உறுதிபடுத்தினால்தான் அந்த தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்து களப்பணி செய்வதற்கு எங்களுக்கு வசதியாக இருக்கும்’ என்றும் அமித்ஷா கூறியிருக்கிறார். கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தடவை குறைந்தபட்சம் 9 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்பதில் பா.ஜனதா தீவிரமாக உள்ளது.
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கோவை, வேலூர், ராமநாதபுரம், வடசென்னை உள்பட 9 தொகுதிகளை பா.ஜனதா இப்போதே தேர்வு செய்துவிட்டது. இதை வலியுறுத்தும் வகையில் தான் அமித்ஷா அ.தி.மு.க. கூட்டணியில் தோழமை கட்சிகளுக்கு 20 இடங்கள் வேண்டும் என்று கேட்டு வலியுறுத்தியிருக்கிறார். அ

இதையடுத்து தி.மு.க. கூட்டணியின் பலம்-பலவீனம் பற்றி ஆய்வு செய்திருக்கிறார்கள். அடுத்து ஓ.பன்னீர் செல்வம் பிரிவதால் பாதிப்பு ஏற்படுமா? என்றும் விவாதித்து இருக்கிறார்கள். மேலும் பிரசாரம் பற்றியும் ஆய்வு செய்து இருக்கிறார்கள். தமிழகத்தில் தற்போது நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் அதை பிரசாரத்திற்கு கையில் எடுக்கலாமா? என்பது பற்றியும் அவர்கள் விவாதித்திருக்கிறார்கள்.

இந்த விவாதம் நடந்த போது மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்துள்ளார். இதுவரை டெல்லி மேலிட தலைவர்களை பார்க்கும் போது மாநில தலைவர் உடன் இருந்ததில்லை. முதல் முறையாக அண்ணாமலையையும் அருகில் வைத்துக்கொண்டே அமித்ஷா பேசி உள்ளார். எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க.வினருடன் சுமூகமான நிலையில் கட்சி பணியாற்ற வேண்டும் என்று அண்ணாமலையிடம் தெரிவித்து அமித்ஷா சமரசம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை சலசலப்பு ஏற்பட்ட பிறகு பா.ஜனதா கட்சி அதிகாரப்பூர்வமாக எந்த அணி பக்கமும் சாயாமல் இருந்தது. தற்போது முதல் முறையாக எடப்பாடி பழனிசாமியை அழைத்து அங்கீகரித்துள்ளனர். இது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. அதே சமயத்தில் அண்ணாமலையும் உடன் இருந்ததால் தமிழக பா.ஜ.க.வுக்கும் சம வெற்றியாக பேசப்படுகிறது’’ என்றனர்.

ஆக, மொத்தத்தில் உங்களுக்கு 20; எங்களுக்கு 20 என தொகுதி பங்கீடு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal