வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் ராணுவவீரர் பிரபு அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய திமுக கவுன்சிலர் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பாக சென்னையில் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக நிர்வாகிகள் பேசினர். அப்போது பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் ராணுவ வீரருமான கர்னல் பாண்டியன் எங்களுக்கு குண்டு வைக்க தெரியும், சண்டை போட தெரியும் என தமிழக அரசை மிரட்டினார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கர்னல் பாண்டியன் மீது போலீசார் இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்தநிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாக வீடியோ பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், உங்களுடைய கையில் துப்பாக்கி இருக்கு, துப்பாக்கிகுள் குண்டு இருக்குனா ஆர்டர் கொடுக்க மோடி இருக்கார்னா சுட்டு தள்ளிட்டு வந்துட்டே இருங்க.. மிச்சதை பாஜக தமிழகத்தில் பார்த்து கொள்ளும் என அண்ணாமலை பேசியுள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் டுவிட்டர் பதிவில் திருமாவளவன் கூறுகையில்,

‘‘ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார்; சுட்டுத்தள்ளுங்கள்’ என ஒருவர் பேசுவதை அசட்டுத் துணிச்சல் என்பதா? முதிர்ச்சியில்லா அரைவேக்காட்டுத்தனம் என்பதா?

திட்டமிட்டே வன்முறையைத் தூண்டும் சங்பரிவார் கும்பலின் கலாச்சாரம் என்பதா? எதுவாயினும் இது தலைமைப் பண்புக்குரியதாகுமா? மோடியும் என்னைப்போன்ற ஒரு பொறுப்பற்ற நபர்தான் என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறாரா? இவர்மீது வழக்குப்பதிந்து கைது செய்திருக்க வேண்டாமா? தில்லியை ஆளும் கட்சிக்கு மாநிலக் கிளைத்தலைவர் என்றால் அவர்மீது சட்டம் பாயாதா? என கேள்வி எழுப்பியுள்ளவர், தமிழக முதலமைச்சர், அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal