கேரள மாநிலம் ஷாரோன் கொலை வழக்கில், தனது காதலனை தான் கொல்லவில்லை என்றும், போலீசார் மிரட்டி அப்படி செல்ல வைத்தனர் என்றும் காதலி கிரீஷ்மா பிறழ் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் மூரியங்கரை பகுதியை சேர்ந்த ஷாரோன்ராஜ், கிரிஷ்மா என்ற இளம் பெண்ணை காதலித்து வந்தார். கடந்த அக்டோபர் மாதம் 14-ம் தேதி தனது வீட்டில் யாரும் இல்லை எனக் கூறி காதலன் ஷாரோனை, கிரீஷ்மா அழைத்துள்ளார். காதலி வீட்டிற்கு சென்ற ஷாரோனுக்கு சிறிது நேரத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு துடித்துள்ளார். ஷரோனின் நண்பர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஷாரோன் உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஷாரோன் ராஜின் காதலியான கிரீஷ்மாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது வீட்டிற்கு வந்த ஷாரோனுக்கு தான் ஒரு ஜூஸ் கொடுத்ததாகவும், அதன் பிறகே அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாகவும் கிரீஷ்மா தெரிவித்தார். பின்னர் அந்த ஜூஸ் பாட்டிலை பார்த்த போது தான் அது காலாவதியாகி விட்டது என்பது தெரியவந்ததாகவும் கிரீஷ்மா கூறினார்.

ஜூஸ் பாட்டில் எங்கே எனக் கேட்டபோது, அதற்கு அவர், கோபத்தில் அதை தூக்கி சாக்கடையில் எறிந்துவிட்டதாக கூறியதை அடுத்து காவல்துறையினருக்கு கிரீஷ்மா மீது சந்தேகம் ஏற்பட்டது. கிரீஷ்மாவிடம் தீவிர விசாரணை நடத்தியதில், விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை ஜூஸில் கலந்து கொடுத்து காதலனை கொன்றதாக வாக்குமூலம் அளித்தார். மேலும் இதற்கு முன்னர் தனது காதலனை பலமுறை கொலை செய்ய முயன்றதாகவும் கிரிஷ்மா தெரிவித்தார்.

இந்த சம்பவம் தமிழகம் மற்றும் கேரளாவை உலுக்கிய நிலையில், சிறையில் இருக்கும் கிரீஷ்மாவின் வாக்குமூலம் நெய்யாற்றின்கரை குற்றவியல் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் அளித்த வாக்குமூலத்தில் தான் ஷாரோனை கொலை செய்யவில்லை என்றும் போலீசார் வேண்டுமென்றே இந்த வழக்கை தன்மீது திணித்துள்ளதாகவும் அப்படியே மாற்றி கூறினார் கிரிஷ்மா.

மேலும் போலீசார் தன்னை மிரட்டி குற்றம் செய்ததாக ஒப்புக்கொள்ள வைத்ததாகவும், அதற்கான ஆதாரங்களை அவர்கள் பொய்யாக உருவாக்கினர் என்றும் கூறியுள்ளார். கிரிஷ்மாவின் அந்தர்பல்டி வாக்குமூலம் இந்த வழக்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட கிரிஷ்மா நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொள்ள மறுத்தாலும், இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கிரீஷ்மா தங்களுக்கு அளித்த வாக்குமூலத்தை முழுமையாக வீடியோ எடுத்துள்ளதாகவும், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காதலன் ஷாரோன் கொலை வழக்கில் பல்வேறு உண்மைகள் அடுத்தடுத்து வெளி வந்த நிலையில், தற்போது அனைத்தும் பொய் என கிரிஷ்மா மறுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal