நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு தியேட்டர்கள் ஒதுக்குவதில் உதயநிதி ஸ்டாலின் தரப்பிற்கும், விஜய் தரப்பிற்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்த நிலையில்தான், நடிகர் விஜய் சினிமாவில் நடிக்க வந்து நேற்றோடு 30 ஆண்டுகள் ஆகிறது. இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியும், சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்தும் வருகின்றனர்.

தேனியில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், நேற்று பல்வேறு இடங்களில் பரபரப்பான அரசியல் வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில் அரசியல் கட்சிகளை விஜய் தலைமையிலான கூட்டணிக்கு அழைப்பது உள்பட பல்வேறு அரசியல் வசனங்களும் இடம் பெற்றுள்ளன.

நாளைய முதல்வர் ”தமிழக மக்களின் பேராதரவோடு 30 ஆண்டுகள் சினிமாவில் வெற்றி. அடுத்த 30 ஆண்டு அரசியல் வெற்றி. முதல்வராக தமிழக மக்களின் பேராதரவோடு எதிர்பார்ப்பு”. ”அரசியல் கட்சிகளுக்கு… கூட்டணி அழைப்புக்கு தளபதியாரின் தலைமையில் தயாராகுங்கள்”. ”வெற்றிடத்தை நிரப்ப வரும் தமிழகத்தின் செல்ல பிள்ளை எங்கள் முதல்வரே”. ”இன்று சினிமாவில் தளபதி. நாளைய தமிழகத்தின் முதல்வரே”. ”இன்றைய இளைஞர்களின் கனவு முதல்வரே. தமிழக மக்களின் கனவை நினைவாக்க வரும் நாளைய தமிழக முதல்வரே” என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அந்த போஸ்டர்களில் இடம் பெற்றுள்ளன.

‘வாரிசு’ திரைப்படத்திலும் அரசியல் வசனங்களை நடிகர் விஜய் தெறிக்க விட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பிப்பது புதிதல்ல! அதே போல், அரசியல் களத்தில் நடிகர் விஜய் சாதிப்பாரா..? சறுக்குவாரா…? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal