சென்னையில் இளம்பெண்களை வைத்து அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் செய்துத வந்த கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 8 பெண்கள் மீட்கப்பட்டனர்.

சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம்பெண்களிடம் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி, அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களா வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து அவர்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதாக தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் பேரில், மேற்படி குற்றவாளிகளை கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதனையடுத்து, மத்திய குற்றப்பிரிவின், விபச்சார தடுப்புப்பிரிவு காவல் குழுவினர் மூலம் கண்காணித்து விபச்சார தரகர்களை கைது செய்து, அப்பாவி பெண்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மடிப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை மாறு வேடத்தில் சென்ற போது பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, பாலியல் தொழில் நடத்திய பெண் புரோக்கர் ஜான்சி (எ) பூர்ணிமா (32), கடலூர் மாவட்டம், வடக்கரை, திட்டக்குடி தாலுகாவை சேர்ந்த சூர்யா (எ) ராஜா (24), மயிலாடுதுறை மாவட்டம், மாயவரம் வடக்கு தெருவை சேர்ந்த குமார் (34) ஆகிய மூவரை கைது செய்தனர்.

மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 8 பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட புரோக்கர் ஜான்சி (எ) பூர்ணிமா மீது பெண்களை வைத்து பாலியலை தொழில் நடத்திய குற்றத்திற்காக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதும், இவர் 2 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் தெரியவந்தது.

அதேபோல், ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் வடக்கு மாடவீதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அங்கு அதிரடியாக நுழைந்து அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 இளம் பெண்களை மீட்டு மயிலாப்பூர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (43) என்ற பாலியல் புரோக்கரை கைது செய்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal