நண்பனின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். நண்பனின் மனைவி சிறுமி என்பதால் அவரின் கணவரையும் போக்சோ சட்டத்தில் தாம்பரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை அடுத்த குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் 15 வயது சிறுமி ஒருவர் அழுதுகொண்டே நின்றிருக்கிறார். அந்த வழியாக சென்ற நபர் இதை கவனித்து விட்டு, என்ன பிரச்சனை என்று விசாரித்து இருக்கிறார். அப்போது, தான் மேற்கு வங்கத்தைச் சார்ந்த பெண் என்பதை சொல்லி இருக்கிறார். தன் கணவரின் நண்பர் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார் என்று சொல்லிக்கொண்டே அழுதிருக்கிறார்.

இதையடுத்து அந்த சிறுமியை குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று புகார் அளிக்க செய்து இருக்கிறார் அந்த நபர். அதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த சிறுமிக்கு 15 வயது ஆகிறது என்றும் மேற்கு வங்கத்தைச் சார்ந்த அந்த சிறுமி சென்னை குரோம்பேட்டை பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்திருக்கிறார். அப்போது குரோம்பேட்டை பகுதியில் தங்கியிருந்து அதே மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தபரோக் உசைன் (28) மற்றும் காலித் ஹசன்(24) என்கிற இளைஞர்கள் கட்டிட வேலை செய்து வந்திருக்கிறார்கள்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பீர்பூம் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இளைஞருர்களுடன் கட்டிட வேலை செய்து வந்திருக்கிறார் அந்த சிறுமி. இதில் ஒன்றாக வேலை பார்த்து வந்ததால் அந்த சிறுமியை திருமணம் செய்திருக்கிறார் தபரோக் உசைன். ஏற்கனவே திருமணம் ஆகியிருக்கும் நிலையில் அந்த சிறுமியை ஏமாற்றி இரண்டாவதாகத் திருமணம் செய்திருக்கிறார்.

கட்டிட வேலை செய்து கொண்டே இங்கே அப்பகுதியில் தங்கி இருந்தபோது பக்கத்து வீட்டில் தங்கியிருந்த தபரோக் உசைன் நண்பர் காலித் ஹசனுக்கு நண்பனின் மனைவி மீது ஈர்ப்பு இருந்து வந்திருக்கிறது. இந்த நிலையில் நண்பனின் மனைவி குளிப்பதை மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்து இருக்கிறார். பின்னர் நண்பன் இல்லாத நேரத்தில் தனிமையில் இருந்த நண்பன் மனைவியிடம் சென்று அந்த வீடியோவை காட்டி இருக்கிறார் காலித் ஹசன்.

அதில் மிரண்டு போய் நின்ற அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். அதற்கு இணங்க வில்லை என்றதும் இந்த வீடியோவை எல்லோருக்கும் காட்டி விடுவேன் என்று சொல்லி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். அதனால்தான் பேருந்து நிலையத்தில் நின்று அழுது கொண்டிருந்ததாக சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து இந்த வழக்கு தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. தாம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் அந்த சிறுமியின் கணவரையும் அவரது நண்பரையும் கைது செய்துள்ளனர். இரண்டு பேரையும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். அந்த சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal