சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் சுகாதாரத் துறையிலிருந்து மாற்றப்பட்டதற்கு ‘இதுதான் காரணம்’ என ஒரு தகவல் உலாவந்துகொண்டிருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் நடந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே ஜெ.ராதாகிருஷ்ணனை சுகாதாரத் துறையிலிருந்து வேறு துறைக்கு மாற்றப்படலாம் என்ற பேச்சு அடிபட்டது. மிகவும் நேர்மையாக செயல்படக்கூடிய அதிகாரி என்பதால், முதல்வர் இவரை தொடர்ந்து செயல்படட்டும் என்று உத்தரவிட்டதாகவும் ஒரு தகவல் அப்போது வெளியாது.

கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட ஜெ ராதாகிருஷ்ணன் எதற்காக மாற்றப்படுகிறார் என்ற கேள்வி எழுந்தது. இத்தனைக்கும் முதல்வர் ஸ்டாலினின் குட் வில் புக்கில் இருந்தவர், பிறகும் ஏன் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் தமிழகத்தில் 35 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் ராதாகிருஷ்ணனின் பெயரும் இருந்தது. இவரது மாற்றம் குறித்து கோட்டை வட்டாரத்தில் பேசினோம்.

‘‘ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் குறித்த கோட்டையில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்ததாம். அதில் ஒரு சில அதிகாரிகள் மாற்ற வேண்டாம் என்று முதல்வர் உத்தரவிட்டதால், அதிகாரிகளின் மாற்றம் தற்காலிகமாக தடைபட்டு வந்தது.

இந்த நிலையில்தான் இறுதியாக ஒரு பட்டியலை முதல்வரிடம் கொடுத்திருக்கிறார்கள். அதை ஓ.கே. செய்திருக்கிறார் முதல்வர். ஜெ.ராதாகிருஷ்ணன் இடமாற்ற விவகாரத்தை நாம் நடவடிக்கையாக கருத முடியாது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளாக ஒரே துறையில் இருந்தால் மாற்றம் செய்வது இயல்புதான்’’ என்றவர்கள், வேறு ஒரு காரணத்தைச் சொன்னார்கள்.

அதாவது, ‘‘ஜெ.ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டதற்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பிரஸ் மீட்தான் காரணம் என சொல்லப்படுகிறது. பால் பவுடர் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இன்னும் கொள்முதல் செய்யாத ஒரு பொருளில் எப்படி ஊழல் நடக்கும் என கேட்டு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அருகே இருந்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தனது போனை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் ஒரு முக்கிய ஊழல் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில் அளிக்கும் போது துறை செயலாளர் எப்படி போனை பார்த்துக் கொண்டு கேசுவலாக இருந்திருக்கிறார். இதனால்தான் இவர் மாற்றப்பட்டார்’’ என்கிறார்கள்!

மேலும், சுகாதாதாரத்துறையில் நடக்கும் தகவல்கள், டெண்டர் விடுவதற்கு முன்பே எதிரணியிருக்கு எப்படிப் போய்ச் சேருகிறது என்ற சந்தேகமும் ஆளுந்தரப்பிற்கு இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal