கிறிஸ்தவ ஆசிரமத்தில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை கண்டித்த கன்னியாஸ்திரியை கட்டி வைத்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

அந்த விவகாரத்தில் கன்னியாஸ்திரி அளித்துள்ள புகாரின் பேரில் சக கன்னியாஸ்திரிகள் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மைசூர் பகுதியில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் குடகு மாவட்டம் கோணிகுப்பா டவுன். இப்பகுதியில் செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகள் ஆசிரமம் இயங்கி வருகிறது. கிறிஸ்தவ பேராலயத்தின் கீழ் இந்த ஆசிரமம் இயங்கி வருகிறது. இந்த ஆசிரமத்தில் 35க்கும் மேற்பட்ட செவித்திறன் குறைபாடு உடைய குழந்தைகள் உள்ளனர் . இந்த ஆசிரமத்தில் தலைமை ஆசிரியராக கன்னியாஸ்திரி மார்கரெட் என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டில் வந்து சேர்ந்தார்.

மார்கரெட் தலைமை ஆசிரியராக வந்த பின்னர் அந்த ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களால் பாலியல் தொல்லை இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து ஆசிரம நிர்வாகிகளிடம் மார்கரெட் புகார் அளித்த போதும் அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மார்கரேட்டை ஆசிரமத்தை விட்டு நீக்கி இருக்கிறார்கள். இதனால் மைசூரில் இருக்கும் வேறு ஆசிரமத்தில் சேர்ந்து இருக்கிறார் மார்கரேட்.

ஆனாலும் அந்த ஆசிரமத்தில் நடக்கும் அக்கிரமத்தை தட்டி கேட்க, அம்பலப்படுத்த முடிவெடுத்துள்ளார் மார்கரெட். இதை தெரிந்துகொண்டதும் மார்கரெட் சித்திரவதைக்கு உள்ளாகி இருகிறார்.

உடனே, மைசூரு அசோகபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னுடன் வேலைபார்த்த சக கன்னியாஸ்திரிகள் தீபா, அன், பிந்து மற்றும் அந்த ஆசிரமத்தில் டிரைவர் வேலை செய்பவர்கள் தன்னை கடத்திச் சென்று கட்டி வைத்து சித்திரவதை செய்தன. தனக்கு மயக்க மருந்து கொடுத்து முதலில் ஒருவர் பலாத்காரம் செய்தார். அதை அடுத்து மற்றொருவர் பலாத்காரம் செய்தார். இப்படி வரிசையாக பலமுறை பலாத்காரம் செய்தார்கள் என்று கூறியிருக்கிறார்.

தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததோடு அல்லாமல் தன்னிடம் இருந்த தங்கச் சங்கிலி ,செல்போன் ,பணம் ஆகியவற்றையும் திருடி விட்டு சென்று விட்டார்கள் என்றும் , நடந்ததையெல்லாம் வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டினார்கள் என்றும் சொல்லியிருக்கிறார். தனக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக ஒரு வீடியோவையும் தாக்கல் செய்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

கன்னியாஸ்திரி அளித்த புகாரின் பேரில் அசோகபுரம் போலீசார் பிந்து, தீபா,அன், ஆசிரமம் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள 4 பேரையும் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர் போலீசார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal