சொந்த வீடு மற்றும் வங்கிகளில் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் நகைக்கடன் பெற்றிருக்கும் முதியோருக்கு, ஓய்வூதியத் தொகை நிறுத்தப்படுகிறது.

தமிழகத்தில், ஆதரவின்றி, உணவுக்கு வழியில்லாமல் தவிக்கும் முதியோருக்காக, மாதந்தோறும் நிதியுதவி அளிக்கும் வகையில், ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம், 1962ல் துவக்கிய போது, மாதம் 20 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிதி படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அரசு நலத்திட்ட நிதியுதவி பெறும் பயனாளிகள் தகுதியானவர்கள் தானா என, ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் உண்மைத்தன்மை கண்டறிய, அவர்களிடம் ஆதார் எண் பெறப்பட்டது.இதன் மூலம், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றுள்ள விபரங்கள், அவர்களது பெயரில் சொத்துக்கள் இருக்கிறதா என்பது போன்ற விபரங்கள் கண்டறியப்பட்டு, பட்டியலிடப்பட்டுள்ளன. ஓய்வூதியம் பெறும் முதியோர் பெயரில், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நகைக்கடன் இருந்தால், நிதியுதவியை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது பற்றி பேசிய வருவாய்த்துறை அதிகாரிகள், ‘‘ஆதரவின்றி, உணவுக்கு வழியில்லாமல் இருப்போருக்கு நிதியுதவி வழங்குவதே ஓய்வூதிய திட்டத்தின் நோக்கம். வசதி உள்ளவர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்படுகிறது. பலருக்கு சொந்தமாக வீடு இருக்கிறது. சிலர், மகன் அல்லது மகள் வீட்டில் வசிக்கின்றனர். வசதியோடு இருப்பவர்களும் நிதியுதவி பெறுவது தெரிய வந்திருப்பதால், நிதியுதவி நிறுத்தப்படும்’’ என தெரிவித்தனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal