ஆயிரம் பேருக்கு மேல் பேச ஆளில்லாத சமஸ்கிருத மொழிக்கு, மத்திய அரசு கோடி கோடியாக கொட்டுவது ஏன் என்று கனிமொழி எம்.பி., கேள்வி எழுப்பியிருக்கிறார்!

சென்னை மடிப்பாக்கத்தில் முத்தரையர் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திமுக எம்.பி.,யும் அக்கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளருமான கனிமொழி பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசியதாவது, ‘‘இங்குள்ளவர்கள் எங்கள் உரிமை, எங்கள் குரல் என பேசிக்கொண்டிருக்கிறார்கள்; ஆனால் நாம் அனைவரும் ஒன்று. தமிழ் இனம் என்பதுதான் நாம் அனைவரையும் இனைத்து வைத்திருக்கிறது. அதன் அடிப்படையிலேயே இதை விட பெரிய எதிரியை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறோம்.

தமிழர்களின் தமிழ் மொழி தொன்மை வாய்ந்தது. மத்திய அரசு சமஸ்கிருதம் மொழி பேச கோடி கோடியாய் செலவு செய்கிறார்கள். ஆனால் அதை பேச ஆள் இல்லை. கோவிலில் வேண்டுமென்றால் பூஜைகள் செய்யலாம், ஆனால் பேச ஆயிரம் பேருக்கு மேல் ஆளில்லை. தொன்மையும் தொடர்ச்சியும் இருக்கும் ஒரே மொழி தமிழ் மொழி. திமுக என்றைக்குமே ஓட்டு வங்கி அரசியல் செய்தது இல்லை’’ இவ்வாறு கனிமொழி பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal