ஹைதராபாத்தில் 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு 35 வயது நபருக்கும் திருமணம் செய்து வைத்ததில், முதலிரவு அன்று, அந்த சிறுமி தப்பித்து காவல் நிலையத்திற்கு சென்ற சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது!
குழந்தை திருமணத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருந்த போதும் தெரிந்தும் தெரியாமலும் ஏராளமான குழந்தை திருமணம் நடைபெற்று வருகிறது. சிறு வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதால் பெண்கள் மன ரீதியாக பாதிக்கப்படும் நிலை உள்ளதால் பெண்களின் திருமண வயது 18 என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் இதனை கருத்தில் கொள்ளாமல் 10 வயது 12 வயதிலேயே திருமணம் செய்து வைக்கும் கொடுமை பல இடங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 8 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமிக்கி ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் கேசம்பேட் மண்டல் பகுதியில் வசித்து வருபவர் கோபால் மற்றும் எல்லம்மா தம்பதி தனது மூத்த மகளின் 12 வது பிறந்தநாளையொட்டி கிராம மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அந்த நேரத்தில் 8 வது படிக்கும் சிறுமிக்கு தனது தாய் மாமவோடு திருமணம் செய்யவும் பெற்றோர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த சம்பவம் கிராம மக்களுக்கு தெரியாமல் விழாவில் கலந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் திருமணமும் நடைபெற்றது. இந்த திருமணத்தால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தனது எதிர்கால வாழ்க்கையை நினைத்து அச்சம் அடைந்தார். வீட்டில் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேரத்தில் சிறுமி தனது மற்றொரு மாமா வீட்டிற்கு தப்பி சென்றுள்ளார்.
இதனை அறிந்த பெற்றோர் சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்தனர். இதனையடுத்து மீண்டும் வீட்டில் இருந்து தப்பிய சிறுமி அங்கன் வாடி ஆசிரியை லட்சுமியிடம் முறையிட்டார். ஆசிரியை லட்சுமியின் உதவியோடு குழந்தை நல மேம்பாட்டு சேவை மைய அதிகாரி சிரிஷாவை சந்தித்து சிறுமி முறையிட்டுள்ளனர். குழந்தை நல அதிகாரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து காவல் துறையினர் குழந்தை திருமணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும்,பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மற்றும் தாய்மாமா மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
குழந்தை திருமணத்தை நடத்த கூடாது என அரசு எச்சரித்து வரும் நிலையில் அதனை மீறி நடைபெற்று வரும் திருமணங்கள் சமூக ஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.