பார்த்து… பார்த்து… ரசித்து… ரசித்து… காதல் திருமணம் செய்துகொண்ட, காதல் மனைவிக்கு, கணவர் உருக்கமான வீடியோவை அனுப்பி, தற்கொலை செய்து கொண்ட சம்பம்தான் சென்னையில் கல் நெஞ்சையும் கரைய வைத்திருக்கிறது.

சென்னை காசிமேடு பழைய அமராஜ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் மதன் (27). ஊர்க்காவல் படை வீரர். பாடி பில்டரான இவர், மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்றுள்ளார். அதே பகுதியை சேர்ந்த ஹேமலதா (25) என்ற பெண்ணை 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்களின் திருமணம் கடந்த டிசம்பர் மாதம் நடந்துள்ளது. தனியாக வீடு எடுத்து இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இதனிடையே, திருமண சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மனைவி விவாகரத்து கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மதன் வீடியோ ஒன்றை ஹேமலதாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவில், “தான் உயிரோடு இருக்கும் வரை விவாகரத்துக் கொடுக்க மாட்டேன். நான் இருப்பதால் தான் உன் படிப்பிற்கு பிரச்சினை. இனி என்னால் உன் படிப்பிற்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது. உன் அம்மா வீட்டில் நீ எப்படி சந்தோஷமாக இருந்தியோ அப்படியே நீ சுதந்திரமாக இருக்கலாம்.

நான் கேட்ட தாலியை இன்னும் 12 மணி நேரத்தில் நீயே கழட்டி கொடுத்துவிடு. ஏனென்றால் அந்த தாலியைக் கழட்டும் போது நான் இருக்க மாட்டேன்” என்று உருக்கத்துடன் பேசியுள்ளார். அந்த வீடியோவை தன் மனைவிக்கு அனுப்பிய பிறகு மதன் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு ராயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal