தமிழகத்தில் வரும் மே 14 ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று(மே 10) 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘நேற்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ‘அசானி’ தீவிர புயல் இன்று( மே10) காலை 8:30 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று இரவு வரை வட மேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக்கூடும். அதன் பிறகு, வடக்கு வடகிழக்கு திசையில் வட ஆந்திரா ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நோக்கி நகரக்கூடும். இது அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும்.

மே 10 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை(மே11) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். மே 12 முதல் 14 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை விட்டு விட்டு பெய்யக்கூடும்.

மத்திய மேற்கு வங்கக்கடல், ஆந்திர கடற்கரை பகுதிகளுக்கு இன்றும்( மே 10), நாளையும்( மே 11),கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு இன்றும்ஒடிசா கடற்கரை பகுதிக்கு நாளையும்,வட மேற்கு வங்க கடல் பகுதிக்கு மே 12 அன்றும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal