பத்திர எழுத்தர் மற்றும் விற்பனையாளர் பற்றாக்குறையை உடனடியாக போக்குவதற்கு, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் நியாயமான கோரிக்கையினை வைத்திருக்கிறார்!

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘நில ஆவணங்கள் உள்ளிட்ட பத்திரப் பதிவு தொடர்புடைய பணிகளை மேற்கொள்வோர் தமிழக ஆவண எழுத்தர் சட்டத்தின்படி, முறைப்படி உரிமம் பெற்றிருக்க வேண்டும். தமிழகத்தில் பத்திரப் பதிவு எழுத்தர் மற்றும் பத்திர விற்பனையாளருக்கான அனுமதி வழங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது.

பத்திரப்பதிவு எழுத்தர் மற்றம் பத்திர விற்பனையாளர்கள் உரிமை பெற்றிருந்தவர்கள் தற்பொழுது பலர் இறந்துவிட்டனர். அந்த இடங்கள் இதுவரை நிரப்பப்படாமலேயே இருக்கின்றன. புதிதாக இதுவரை எந்த புதிய அறிவிப்பும் வரவில்லை. இந்த வேலைக்கான கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.

தற்பொழுது பல இடங்களில் பத்திரப்பதிவு எழுத்தரும், பத்திர விற்பனையாளர்களும் இல்லாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஆகவே படித்து வேலையில்லாமல் பதிவு அலுவலகத்தில் பதிவுசெய்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் முகமாக புதிதாக பத்திரப்பதிவு எழுத்தர்கள் மற்றும் பத்திர விற்பனையாளர்களை உருவாக்க தமிழக அரசு உரிய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்’’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal