‘உன் பொண்டாட்டியை தொந்தரவு செய்யாதே… அவள் என் காதலி’ என்று சொல்லி தாலி கட்டிய கணவனின் மண்டயை உடைத்த கள்ளக்காதனை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த மீனவர் மணிமாறன் (42), இவரது மனைவி அபிபு நிஷா (39). தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், அபிபு நிஷா கணவனை பிரிந்து, தனது 2 குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். மணிமாறன் பலமுறை சென்று மனைவியை குடும்பம் நடத்த அழைத்தும் வர முடியாது திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதனிடையே, அபிபு நிஷாவிற்கும், திருவொற்றியூர் பூங்காவனம்புரத்தை சேர்ந்த யுவராஜ் (36) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் அறிந்த கணவர் மணிமாறன் மனைவியை கண்டித்துள்ளார்.

மேலும், ‘‘உன்னுடன் இருந்தால் குழந்தைகளின் எதிர்காலம் பாழாகிவிடும். என்னிடம் கொடுத்துவிடு,’’ என்று கேட்டுள்ளார். அதற்கு அபிபு நிஷா, ‘‘நான் என் விருப்பம் போல்தான் வாழ்வேன். அதை கேட்க நீ யார். குழந்தையை உன்னிடம் கொடுக்க முடியாது,’’ என்று கூறியுள்ளார். அப்போது மணிமாறன், ‘‘நாம் இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தலாம் வா,’’ என பலமுறை கூறியுள்ளார். ஆனால், அபிபு நிஷா வர மறுத்துள்ளார்.

மேலும் இதுபற்றி யுவராஜிடம் அபிபு நிஷா கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் மணிமாறன் திருச்சினாகுப்பம் கடற்கரையில் இருந்த போது யுவராஜ் மற்றும் அவரது நண்பர் ராம்குமாருடன் சென்று தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த யுவராஜ் அருகில் இருந்த சுத்தியலை எடுத்து மணிமாறன் தலையில் ஓங்கி அடித்துவிட்டு தப்பியுள்ளார். இதில் படுகாயமடைந்த மணிமாறனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராஜ் (36), ராம்குமார் (32) மற்றும் அபிபு நிஷா ஆகியோரை கைது செய்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal