சமீபத்தில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லாது என சசிகலா தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எடப்பாடி & ஓ.பி.எஸ். தரப்பிற்கு சாதகமாக அமைந்தது. இந்த நிலையில் உட்கட்சித் தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் எனக் கூறி ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி, சிவில் வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், ‘‘அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது, அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறியுள்ளனர். மேலும், பொதுச்செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், கடந்த டிசம்பர் மாதம் நடந்த உள்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும்’’ எனவும் கோரப்பட்டுள்ளது.

கட்சியின் உறுப்பினர்களாக இல்லாத மனுதாரர்களுக்கு, இந்த வழக்கை தாக்கல் செய்ய உரிமையில்லை என்பதால், வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு தொடர அனுமதி கோரி ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்ட இருவர் தாக்கல் செய்த மனு நீதிபதி வேல்முருகன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘‘கடந்த 2000ம் ஆண்டு முதல் கட்சியின் உறுப்பினராக உள்ளதாகவும், உறுப்பினர் அட்டை புதுப்பிக்கப்பட்டு, இன்று வரை உறுப்பினராக உள்ளதாகவும் வாதிடப்பட்டது.

இதை மறுத்து அதிமுக நிர்வாகிகள் தரப்பில், உறுப்பினர் அட்டையை புதுப்பித்ததாக கூறி மனுதாரர் தாக்கல் செய்த ஆவணம் போலியானது என வாதிட்டனர். மேலும், கட்சியில் ஒரு பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் மனுதாரர், அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை எனவும் அதிமுக நிர்வாகிகள் தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உண்மையான உறுப்பினர் அட்டையை தாக்கல் செய்ய மனுதாரர் ராம்குமார் ஆதித்தனுக்கு உத்தரவிட்டு, வழக்கு தொடர அனுமதி கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைத்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி வேல்முருகன் அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி.பழனிச்சாமியின் மகன் சுரேன் பழனிச்சாமிக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இருவரும் தொடர்ந்த வழக்கை எண்ணிட்டு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal