கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வரும் ஊட்டி அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா தேனி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இது தொடர்பாக சயான், மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.

கடந்த ஆகஸ்டு மாதம் முதல் இந்த வழக்கில் மறு விசாரணை நடந்து வருகிறது. 5 தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் 58 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கொடநாடு வழக்கை விசாரித்து வந்த நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய்பாபாவும் ஒருவர். இவர் கொடநாடு வழக்கை விசாரித்த போது சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தவர். தற்போது இவர் தேனி முதன்மை மாவட்ட நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.

இதையடுத்து நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதியாக முருகன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இனி கொடநாடு வழக்கு விசாரணை இவர் தலைமையில் தான் நடைபெறும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal