காங்கிரசை பலப்படுத்துவது தொடர்பான பிரசாந்த் கிஷோரின் திட்டம் குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வருகிற 29&ந்தேதி காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல்கள் மற்றும் 2024ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைக்கும் வகையில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் தீவிர ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து கட்சியில் மாற்றங்கள் கொண்டு வருவது, வாரிசு அரசியலை தடுக்க, ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டுமே காங்கிரஸ் தலைவராக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை அவர் சோனியாகாந்தியிடம் அளித்துள்ளார்.

இந்நிலையில் அவரது பரிந்துரைகள் உண்மையில் காங்கிரஸிற்கு பயன் அளிக்குமா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவை சோனியாகாந்தி நியமித்திருந்தார்.

பிரியங்கா காந்தி , கே.சி.வேணுகோபால், ரந்தீப் சுர்ஜேவாலா, பி.சிதம்பரம், அம்பிகா சோனி, ஜெய்ராம் ரமேஷ் மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோர் அடங்கிய குழு கிஷோரின் ஆலோசனைகள் குறித்த விரிவான அறிக்கை மற்றும் தங்களது கருத்தை சோனியாகாந்தியிடம் சமர்ப்பித்துள்ளது.

இதையடுத்து பிரசாந்த் கிஷோரை கட்சியில் இணைப்பது உள்ளிட்ட அவரது பரிந்துரைகள் குறித்த இறுதி முடிவை சோனியா காந்தி எடுப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோரின் பரிந்துரைகள் குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரும்பாலான பரிந்துரைகள் நடைமுறை பயனுள்ளவை என்று சிலர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பிரசாந்த் கிஷோரை ராஜஸ்தான் காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட் வெளிப்படையாக பாராட்டி உள்ள நிலையில்,, அவர் கட்சியில் இணைவதை எதிர்ப்பவர்கள் சீர்திருத்த எதிர்ப்பாளர்கள் என்று வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

கிஷோர் முறையாக கட்சியில் இணைந்தால், காங்கிரஸுக்கு பலன் கிடைக்கும் என்றும் சில மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளதாக தெரிகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal