அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 37 அரசியல் தலைவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

‘அரசியல் ஆதாயம் பற்றியதல்ல; அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்துவது பற்றியதாகும்’ எனக்கூறி, அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்., தலைவர் சரத்பவார், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சீதாராம் யெச்சூரி, சந்திரபாபு நாயுடு, லாலு பிரசாத், பவன் கல்யாண், ஓவைசி உள்ளிட்ட 37 தலைவர்களுக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘‘ கூட்டாட்சி மற்றும் சமூகநீதிக் கோட்பாடுகளை வென்றெடுக்க அரசியல் கட்சித் தலைவர்கள், குடிமைச் சமூகத்தின் உறுப்பினர்கள், ஒத்த சிந்தனையுள்ள தனிநபர்கள் ஆகிய அனைவரையும் ஒரு பொதுவான குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும். சமூகநீதி என்பது அனைவருக்கும் சமமான பொருளாதார, அரசியல், சமூக உரிமைகளும் வாய்ப்புகளும் அமையவேண்டும் என்ற எண்ணம்தான்.

அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் என்பதை உறுதிசெய்வதன் வழியாகத்தான் நமது அரசியல் சட்டத்தை இயற்றியவர்கள் காண விரும்பிய சமத்துவச் சமுதாயத்தை கட்டியமைக்க முடியும். சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூகநீதி ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் பிரிவினையை எதிர்த்துப் போரிட முடியும். சமூகத்தின் பொது நீரோட்டத்தில் இருந்து விலக்கப்பட்டு நூற்றாண்டுகளாய் எதிர்கொண்ட அடக்குமுறையை உடைத்தெறிய வேண்டுமானால் பின்தங்கியவர்களுக்கு ஒவ்வொரு படியிலும் சில சிறப்புரிமைகள் தரப்பட வேண்டும்.

இந்த குறிக்கோள்களை அடைய, உண்மையாகவே மாநிலங்களாலான ஒன்றியமாக நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரம் இது. ஒவ்வொரு மாநிலத்திலும், வாய்ப்புக்கான கதவுகள் திறக்கப்படுவதற்காக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் ஆவலுடன் உள்ளன. ஆகவே, தங்கள் அமைப்பில் இருந்து இந்த அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்புக்கான பிரதிநிதிகளாகத் தக்க நபர்களை நியமிக்குமாறு அக்கறையுடன் கேட்டுக்கொள்கிறேன்’’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை புறக்கணித்துவிட்டு, ஓ.பி.எஸ்.ஸிற்கு முதல்வர் கடிதம் எழுதயிருப்பது பற்றி அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம்.
‘‘ஓ.பன்னீர் செல்வம் என்றைக்குமே ஒரு நிலைப்பாட்டில் இருந்ததது கிடையாது. அ.தி.மு.க.வில் இருந்துகொண்டே, ‘சசிகலாவுக்கு ஆதரவாக’ செயல்படுவதுபோல் இருந்தார். ஆனால், அவர் சசிகலாவுக்கும் ஆதரவாக இல்லை. அதே போல், தி.மு.க.விற்கு இணக்கமாக இருப்பது போல் அவரின் செயல்பாடுகள் இருக்கிறது இதனால்தான், முதல்வர் எடப்பாடியாருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு, ஓ.பி.எஸ்.ஸை எப்படி வேண்டுமானாலும் வளைத்துவிடலாம். ஆனால், எடப்பாடியாரை வளைக்கமுடியாது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. அதே போல், 2016&ல் ஜெயலலிதா மீண்டும் ஆட்சியமைக்க கொங்கு மண்டலம்தான் காரணமாக அமைந்தது. இதையெல்லாம் மனதில் வைத்துதான் எடப்பாடியை ஓரங்கட்டும் வேளையில் முதல்வர் இறங்கியிருக்கிறார். இதைப்பற்றியெல்லாம் எடப்பாடியாரும் கண்டுகொள்ள மாட்டார்’’ என்றனர்.
ஓ… அரசியல் கட்சிக்குள்ளே இத்தனை ‘அரசியலா..?’

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal