2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் தோல்விக்கான காரணத்தை அறிய குழு அமைத்தார் ஸ்டாலின். அந்தக் குழு அளித்துள்ள அறிக்கைதான் மு.க.ஸ்டாலினை அதிர்ச்சியில் ஆழத்தியிருக்கிறது.

திமுக ஆட்சியில் திமுகவினரே மகிழ்ச்சியாக இல்லையா என்று அதிர்ச்சி அடைந்துள்ள ஸ்டாலின், அமைச்சர்கள் கீழ் மட்ட தொண்டர்களின் கோரிக்கைகளுக்கு கொஞ்சம் செவிசாய்க்கவில்லை என்பதையும் தெரிந்து கொண்டுள்ளார்.

சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுகவில் நிலவும் உள்ளடி வேலைகள் மற்றும் தோல்விக்கான உண்மைக் காரணங்களைக் கண்டறிய திமுக தலைமை ஒரு சிறப்பு ஆய்வுக் குழுவை அமைத்திருந்தது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று, அடிமட்டத் தொண்டர்கள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை ரகசிய விசாரணை நடத்தி, தங்களது அறிக்கையை ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளனர்.

அந்த அறிக்கையைப் படித்து பார்த்து வரும் ஸ்டாலின், கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆட்சிக் காலத்தில் அரசு தரப்பில் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும், கட்சியின் உண்மையான அடிமட்டத் தொண்டர்களுக்கும், உள்ளூர் நிர்வாகிகளுக்கும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்தும், நம் சொந்தத் தொண்டர்களே நிம்மதியோ, மகிழ்ச்சியோ இல்லாமல் தவித்து வந்துள்ளனர் என்ற தகவல் அறிக்கையில் விரிவாக இடம்பெற்றுள்ளது ஸ்டாலினை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மேலும், தி.மு.க. ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் சேர்மன்கள் டெண்டர்களை எடுத்து தங்களை மட்டுமே வளப்படுத்திக்கொண்டார்களே தவிர, மற்றவர்களுக்கு சம்பாதிக்க எந்தவொரு வாய்ப்பும் கொடுக்கவில்லை. இதனால், அதிருப்தியில் இருந்த ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகள் தேர்தலில் சரியாக வேலை பார்க்கவில்லை. சென்னை, திருச்சி, கோவை, மதுரை போன்ற மாநகரங்களில் இது அளவுக்கு அதிகமாக நடந்திருப்பதாகவும் ஸ்டாலினுக்கு தகவல்கள் சென்றிருக்கிறது.

மக்களுக்காக உழைத்தோம், ஆனால் நமக்காக வாக்களிக்கும் சொந்தக் கட்சியினரையே நாம் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று அவர் வருத்தமடைந்ததாகக் கூறப்படுகிறது. தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பது, அப்போதைய அமைச்சர்களின் அலட்சியப் போக்குதான். மாவட்டப் பொறுப்பிலும், அமைச்சர் பதவியிலும் இருந்த பல மூத்த தலைவர்கள், தங்களை நம்பி வந்த கீழ்மட்டத் தொண்டர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குக் கூடக் கொஞ்சம் கூடச் செவிசாய்க்கவில்லை என்ற உண்மை அம்பலமாகியுள்ளது.

அமைச்சர்களைச் சந்திக்கச் சென்ற தொண்டர்கள் அவமதிக்கப்பட்டதும், அவர்களின் குறைகளைத் தீர்க்க அமைச்சர்கள் எவ்வித முயற்சியும் எடுக்காததும், அடிமட்ட அளவில் மிகப்பெரிய அதிருப்தியையும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது. இந்த உள்கட்சி ஆத்திரமே, தேர்தல் சமயத்தில் பல இடங்களில் கட்சி வேலைகளைத் தொண்டர்கள் சுணக்கமாகச் செய்ததற்கும், தவெக போன்ற மாற்று சக்திகளை நோக்கி மக்கள் நகர்ந்ததற்கும் வழிவகுத்துள்ளது என அறிக்கையில் சொல்லப்பட்டதை ஸ்டாலின் கவனித்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் திமுகவில் விரைவில் மறுசீரமைப்பு பணிகளை ஸ்டாலின் செய்ய தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக 4, 5 தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளர்களின் பவரை குறைக்கும் வகையில் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இளைஞர்களுக்கும் அதிகளவில் வாய்ப்புகளை கொடுக்கவும் ஸ்டாலின் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal