அதிமுகவில் தனியாக செயல்பட்ட வேலுமணி அணி, பழனிசாமி அணியுடன் மீண்டும் இணைந்தது. இதன்பின்னர் பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக்க சபாநாயகரிடம் அவர்கள் கடிதம் அளித்தனர்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வென்றது. இதில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவளித்தனர். 22 எம்எல்ஏ.க்கள் பழனிசாமிக்கு ஆதரவளித்தனர். அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக வேலுமணியை நியமிக்க 25 எம்எல்ஏ.க்களும், பழனிசாமியை நியமிக்க 22 எம்எல்ஏ.க்களும் தனித்தனியாக சபாநாயகரிடம் மனு அளித்தனர்.
இதனையடுத்து அந்த 25 எம்எல்ஏ.க்களின் கட்சிப்பதவியை பறித்து அதிரடி காட்டினார் பழனிசாமி. மேலும் அவர்கள் மீது கட்சித்தாவல் நடவடிக்கை எடுக்கவும் தயாரானார். இந்தச் சூழலில் வேலுமணி அணியில் இருந்த 4 எம்எல்ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
இந்நிலையில், நேற்று வேலுமணி அணியை சேர்ந்த நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பழனிசாமியுடன் பேசினர். இதனையடுத்து இன்று எஸ்.பி.வேலுமணி தரப்பினர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இதன் காரணமாக இருதரப்ப்பிலும் நிலவிய குழப்பம் முடிவுக்கு வந்தது.
அதிமுகவின் இரு அணிகளுக்குள்ளும் சமரசம் ஏற்பட்டதை அடுத்து, அவர்கள் கூட்டாக தலைமைச் செயலகம் சென்று ஏற்கெனவே வேலுமணியை சட்டப்பேரவைக் குழு தலைவராக்க அளித்த மனுவை திரும்பப் பெற்றனர். அதுபோல வேலுமணி அணியை தகுதிநீக்கம் செய்யக்கோரிய கடிதத்தை பழனிசாமி தரப்பும் திரும்பப் பெற்றது.
இதன்பின்னர் அனைவரும் கூட்டாக பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழு தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கொறடாவாகவும் நியமிக்க கோரி சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் கடிதம் அளித்தனர். இந்த சந்திப்புகளில் சி.வி.சண்முகம் மட்டும் இடம்பெறவில்லை.
எடப்பாடி பழனிசாமி சி.வி.சண்முகத்துக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுத்து, பின்னர் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணியை செயல்படுத்தி வந்த சி.வி.சண்முகம் தற்போது தனித்துவிடப்பட்டிருக்கிறார்.
