“இது தூய சக்தியா அல்லது அடுத்த கட்சி எம்எல்ஏ-க்களைத் தூக்கும் சக்தியா என தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களித்த மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிவிட்டது” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.
அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான பிரேமலதா விஜயகாந்த், ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி, நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாருடைய நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக்கிறது. அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்கள் தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்தான்.
ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது? தூய அரசியல் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், அழுக்கு அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள்.
பிளவுபட்ட அதிமுக எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி செய்து, அவர்களின் உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். “உங்களோட தொடக்கமே இப்படி இருந்தா முடிவு எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி எம்எல்ஏ-க்களைத் தூக்குற சக்தியா?” எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களித்த மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிவிட்டது.
முதல்வரே, உங்கள் செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்கிறார்கள். அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன ‘ரிடர்ன் கிஃப்ட்’ கொடுக்கப் போகிறீர்கள் என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை, திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியாக இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும்’ என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
