அதிமுகவில் ஒரு தரப்பை மட்டும் முதல்வர் விஜய் ஆதரிப்பது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவின் பொதுச்செயலாளர் நான். கட்சி நிர்வாகிகளின் பெருமித்த ஆதரவோடு நான் இந்த பொறுப்பிற்கு வந்தேன். என் தலைமையில் தேர்தலை சந்தித்தோம்.

இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நின்றுதான் 47 எம்எல்ஏக்கள் வெற்றிபெற்றோம். தேர்தலுக்கு பின் கட்சிக்குள் சிலர் அதிருப்தியில் உள்ளனர். சில எதிர்ப்பு குரல்கள் உள்ளன. இதெல்லாம் இயல்புதான். ஆனால் இப்படிப்பட்ட நேரத்தில் அதிமுகவில் ஒரு தரப்பை மட்டும் முதல்வர் விஜய் ஆதரிப்பது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும்.. ஒரு சிலருக்கு ஆசை வார்த்தை கூறி அழைக்கிறார்கள்.. பலருக்கு அமைச்சர் பதவி தருகிறோம்.. வாரிய தலைவர் தருகிறோம் என்று கூறி அதிமுகவினரை தவெகவினர் அழைக்கிறார்கள். இதெல்லாம் எனக்கு வந்த தகவல். தூய்மையான ஆட்சி என்று குறிப்பிட்ட நீங்கள் அதில் பிறழாமல் நடக்க வேண்டும். அதிமுகவில் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. இந்த சூழலில் ஒரு தரப்புக்கு ஆதரவாக சென்று முதலமைச்சர் விஜய் சந்தித்துள்ளார். இது எந்த வகையில் நியாயம்? தவறான முன்னுதாரணமாக மாறிவிடக் கூடாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு (Floor Test) தமிழக அரசியலே உற்றுநோக்கும் ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. 108 இடங்களைப் பிடித்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK), ஏற்கனவே காங்கிரஸ் (5), இடதுசாரிகள் (4), ஐயுஎம்எல் (2) மற்றும் விசிக (2) என 120 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் மெஜாரிட்டியைத் (118) தாண்டிவிட்டது. இந்தச் சூழலில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான 30-க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள், தவெக-விற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தவெக 107 இடங்களில் வென்றிருந்தாலும் (விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்த பின்), தனிப்பெரும் கட்சியாக மட்டுமே ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தரும் ஆதரவு “வெளியிலிருந்து” (Outside Support) மட்டுமே. எந்த நேரத்திலும் இவர்களால் ஆட்சிக்கு அழுத்தம் கொடுக்க முடியும். ஆனால், அதிமுகவின் 30+ எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைத்தால், விஜய்யின் பலம் 150-ஐத் தாண்டும். இது ஒரு நிலையான (Stable Government) ஆட்சியை அமைக்க உதவும். காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஆதரவு அளிக்கும்போது சில கொள்கை ரீதியான முரண்பாடுகளை முன்வைக்கலாம்.

குறிப்பாக, மத்திய அரசுடனான உறவு அல்லது சில மாநிலத் திட்டங்களில் அவர்களின் தலையீடு இருக்கலாம். அதிமுக அதிருப்தி அணியை அமைச்சரவையில் இணைத்துக்கொள்வதன் மூலம் (4 கேபினட் இடங்கள் பேச்சுவார்த்தையில் உள்ளதாகத் தகவல்), மற்ற கூட்டணிக் கட்சிகளின் அதீத அழுத்தத்தை விஜய் சமன் செய்ய முடியும். எஸ்.பி. வேலுமணி கொங்கு மண்டலத்தின் அசைக்க முடியாத சக்தியாகவும், சி.வி. சண்முகம் வட தமிழகத்தில் வன்னியர் வாக்கு வங்கியைப் பாதிக்கும் திறனுள்ளவராகவும் கருதப்படுகிறார்கள். இந்த “மாஸ்டர் பிளான்” மூலம், தவெக இந்த இரண்டு முக்கிய மண்டலங்களிலும் தனது அடித்தளத்தை வலுப்படுத்திக்கொள்ளத் துடிக்கிறது. அதிமுகவின் இந்த சீனியர் அமைச்சர்களின் நிர்வாக அனுபவம், முதல்முறையாக ஆட்சிக்கு வரும் விஜய்க்குப் பெரிய பலமாக இருக்கும்.

இந்த நிலையில், அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடியை தேர்வு செய்திருப்பதாக எடப்பாடி ஆதரவு அணி 17 எம்.எல்.ஏ.க்களும், வேலுமணியை தேர்வு செய்திருப்பதாக 30 எம்.எல்.ஏ.க்களும் மனு கொடுத்துள்ளனர். அதிமுக கொறடாவாக சி.வி விஜயபாஸ்கர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்று சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். இதனை சீர் தூக்கி எந்த அணிக்கு சாதகமாக சபாநாயகர் தீர்ப்பு அளிக்கிறாரோ அவர் தான் அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவர். அந்த அணி தரப்பில் கொறடாவாக யாரை நியமித்து உள்ளனரோ அவர் தான் கொறடாவாக செயல்பட முடியும். அந்த வகையில் வேலுமணியை சபாநாயகர் அங்கீகரித்து விட்டால், வேலுமணி நியமிக்கும் கொறடாவின் உத்தரவை எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஏற்க வேண்டும். வேலுமணி அணியின் கொறடா, விஜய்யின் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்க்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று உத்தரவிட்டால் அதனை எடப்பாடியின் 17 எம்.எல்.ஏ.க்களும் ஏற்க வேண்டும். இதற்கு மாறாகவோ, எதிர்த்தோ வாக்களித்தால் அந்த 17 பேரின் பதவியை பறிக்க சபாநாயகரிடம் வேலுமணி தரப்பு புகார் கொடுத்தால், அதனை சபாநாயகர் ஏற்க வாய்ப்பிருக்கிறது. இதைத்தான் இன்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு விஜய் செய்வது.. குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal