‘ஜனநாயகன்’ படத்தில் அந்நிய சக்திகள் நாட்டில் பிரச்சினை ஏற்படுத்துவது போலவும், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்ட புகார் தீவிரமானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

‘ஜனநாயகன்’ படத்துக்கு சான்று வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா ம்ற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவில், அந்நிய சக்திகள் நாட்டில் மதப் பிரச்சினையை உருவாக்கும் வகையிலும், மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புகார் தீவிரமானது. படத்தை திரையிட அனுமதிக்கும் முன், இதை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதால், படம் மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்சார் போர்டுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்காதது தவறு. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவது குறித்த முடிவு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்ட போதிலும், அந்த முடிவுக்கு எதிராக கோரிக்கை வைக்காமல் பட நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. கோரிக்கை வைக்காத நிலையில் முடிவை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal