கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய குடிமக்கள் 6 பேர் உயிரிழந்தனர்; 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. நள்ளிரவு 1.30 மணியளவில் இத்தாக்குதல் நடந்தது. இதனை உறுதிப்படுத்திய இந்திய ராணுவம், “நீதி நிலைநிறுத்தப்பட்டது. ஜெய்ஹிந்த்.” எனப் பதிவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்தியாவின் தாக்குதலை போர் நடவடிக்கையாகவே பார்ப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் தாக்குதலுக்கு உரிய நேரத்தில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி தாக்குதலையும் பாகிஸ்தான் தொடங்கியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தானின் சர்வதேச எல்லைப் பகுதியான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு (எல்ஓசி) அருகே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்தியக் குடிமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலால் ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச், குப்வாரா மற்றும் பாராமுல்லா மாவட்டங்களில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதலை அடுத்து எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே அமைந்துள்ள மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி எல்லையோரத்தில் வசிக்கும் மக்கள் இடம்பெயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூரை பிரதமர் மோடி நேற்றிரவு மூலம் கவனித்து வருகிறார். பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் இணைந்து பிரதமர் மோடி கவனித்தார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பஹல்காமில் அப்பாவி சகோதரர்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியாவின் பதிலடி. இந்தியக் குடிமக்கள் மீதான எவ்வித தாக்குதலுக்கும் மோடி அரசு சரியன பதிலடி கொடுக்கும் உறுதியோடு இருக்கிறது. பயங்கரவாதத்தை அதன் வேரோடு அழிப்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது.” என்று பதிவிட்டுள்ளார்.