‘நமது எம்.ஜி.ஆர். நாளிதழின்’ முன்னாள் ஆசிரியரும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அறிக்கை எழுதிக்கொடுத்த எழுத்தாளரும், ஓ.பி.எஸ். ஆதரவாளருமான மருது அழகுராஜ் திடீரென தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை பாராட்டி பதிவிட்டிருப்பதுதான் அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

‘‘#புத்தியும்..#யுக்தியும்’’ என்ற தலைப்பில் மருது அழகுராஜ தனது ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில்,

‘‘67-ல் பேரறிஞர் அண்ணாவின் பெருவெற்றிக்கு காரணம் அவரின் அயராத உழைப்பும்…

அவரது நிழலில் அணிவகுத்து நின்ற புரட்சித்தலைவர் கலைஞர, நாவலர், நாஞ்சிலார்,சொல்லின் செல்வர் போன்ற ஆற்றலாளர்களையும் திறமைப் போக்கிஷங்களையும் காங்கிரஸை வீழ்த்துவதற்கான ஆயுதங்களாக்கியதும்…

குறிப்பாக மக்கள் திலகம் எம்ஜிஆரின் கலையுலகச்செல்வாக்கை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டதும் தான்….

அதே போல் 77-ல் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் புரட்சிகர வெற்றிக்கு காரணம் கலைஞரால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தன்மீது ஏற்பட்ட மக்களின் அனுதாபத்தோடு…

அதே திமுகவால் வீழ்த்தப்பட்ட காங்கிரஸின் ஆதரவு வாக்குகளையும் தன்வசப்படுத்திக் கொண்டதும்…
பட்டிதொட்டியெல்லாம் பாதம் பதித்த அவரது சுழன்றுழைத்த சுற்றுப்பயணமும்….

கூடவே “சரியான தளபதிகளை தயார்படுத்திவிட்டால் மன்னன் போர்களத்துக்கே போகவேண்டியதில்லை பட்டாபிஷேகத்திற்கு சென்றால் போதும்” என்கிற தத்துவத்தை மிகச்சரியாக கையாண்ட அவரது யுத்தமுறையுமே வெற்றிமாலையை அவருக்கு பரிசாக்கியது…

ஆக வாய்ப்புகள் உருவானாலும் அதனை வசப்படுத்தும் முயற்சியும் உழைப்பும் திறமையாளர்களை கச்சிதமாக கையாளும் அரவணைப்புமே 67 மற்றும் 77- ல் மலர்ந்த அரசியல் புரட்சிக்கு காரணம் என்பதே உண்மை…

ஆனால் அத்தகைய யுக்தியோ புத்தியோ பத்துத் தேர்தல் தோல்விக்குப் பிறகும் தன்னிடம் இல்லாத காரணத்தால் தான்…

தன்கட்சியை தானே உடைத்து நொறுக்கிக் கொண்டு அதிமுகவையே ஆக்ரமிக்க பெரும்பிரயத்தனம் செய்யும் பாஜகவின் பாதத்தில் எடப்பாடி சரனாகதி அடைந்திருப்பதற்கு காரணமாகும்…

அதேவேளை திமுக தலைவர் ஸ்டாலினோஆட்சியை விட அரசியலை மிகச்சிறப்பாக முன்னெடுப்பது அவருக்கான பலமாக இருக்கிறது என்பதை அவரை எதிர்ப்பவர்களும் எற்கிறார்கள் என்பதும் உண்மையாகும்…

என்னநாஞ் சொல்றது….’’ என்று பதிவிட்டிருக்கிறார்.

தமிழக முதல்வரை முன்பு கடுமையாக விமர்சித்து வந்தவர் மருது அழகுராஜ்! தற்போது முதல்வரை பாராட்டியற்கான மனமாற்றத்தின் பின்னணி என்ன? என அலசி ஆராய்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal