டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை 60 மணி நேரம் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி, டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனை முதலில் விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில்குமார் அமர்வு, அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. பின், இந்த வழக்கின் விசாரணையில் இருந்து நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு விலகியதை அடுத்து, வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தலாம் எனக் கூறி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.