அதிமுக கட்சிக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி அதிமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அக்கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, சூர்யமூர்த்தி அளித்த விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பதிவு செய்து கொண்ட உயர்நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது. இதனிடையே, இரட்டை இலை சின்னம், உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் அடிப்படையில் கட்சியில் பிளவு உள்ளதா என திருப்தி அடைந்த பிறகே விசாரணையை தொடர வேண்டும்.. அத்துடன், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் அடிப்படையில், கட்சியில் இரு குழுக்கள் உள்ளனவா என உறுதி செய்த பிறகே விசாரணையை தொடர வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படி மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என பிறப்பித்த உத்தரவை, சூர்யமூர்த்தி தாக்கல் செய்த வழக்கில் பிறப்பித்த உத்தரவில் சேர்க்கக்கோரி, அதிமுக தரப்பில் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு தாக்கல் செய்ய ஏற்பட்ட தாமதத்தை பொறுத்து, மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என, முறையிடப்பட்டது.. இதனை ஏற்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு, மனுவை விசாரணைக்கு பட்டியலிடும்படி, உயரநீதிமன்ற பதிவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.. எனவே, இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal