த.வெ.க. தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்தது தொடர்பாக அவருக்கும் பா.ஜ.க.வுக்கும் தொடர்பை ஏற்படுத்தி வலைதளங்களில் பதிவுகள் வருகிறது. கட்சியின் முதல் மாநாட்டிலேயே ‘எனக்கு எந்த சாயமும் பூசமுடியாது’ என விஜய் கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், சகோதரர் விஜய்யும், திமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து, ஆளுநரைச் சந்தித்துப் பேசியிருப்பதை வரவேற்கிறோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘‘அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது, திமுக நிர்வாகி பாலியல் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், விசாரணை குறித்து முன்னுக்குப் பின் முரணாக, காவல்துறையும், அமைச்சர்களும் பேசி வருவதால், திமுக அரசின் விசாரணையில் நம்பிக்கையின்மை குறித்தும், தமிழக பாஜக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

இன்றைய தினம், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், சகோதரர் விஜய்யும், திமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து, ஆளுநரைச் சந்தித்துப் பேசியிருப்பதை வரவேற்கிறோம். வழக்கை திசைதிருப்ப தொடர்ந்து முயற்சித்து வரும் திமுக அரசைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரனாக, அனைத்துக் கட்சியினரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நம் சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் இன்று சந்தித்துப் பேசினார்.

அப்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், புயல் பாதிப்புக்கு மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகள் கொண்ட மனுவை விஜய் தமிழக ஆளுநரிடம் வழங்கினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal