அண்ணா பல்கலை.யில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை ஐகோர்ட் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவியின் புகாரை அடுத்து, ஞானசேகரன் என்ற நபரை போலீசார் கைது அவருக்கு மாவுக்கட்டு போட்டு சிறையில் அடைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபருடன் வேறு யாரேனும் இதில் தொடர்பு உடையவர்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந் நிலையில் மாணவி பாலியல் வழக்கை சென்னை ஐகோர்ட் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

பெண் வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர் சென்னை ஐகோர்ட்டுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் போலீசார் விசாரணை குறைபாடு இருப்பதாக தெரிகிறது. வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட போதிலும் ‘‘சார்’’ என்ற சொல்லப்படும் நபர் யார், அவரது பின்னணி என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். எனவே வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இது தொடர்பாக வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் என்பவர் கோர்ட்டில் முறையிட அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் சுப்ரமணியம், லட்சமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடிதத்தையே வழக்காக எடுத்துக் கொண்டு உள்ளது.

மேலும் இதன் மீது, உள்துறை செயலாளர், டி.ஜி.பி, மாநகர போலீஸ் கமிஷனர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்றும், இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal