மறைந்த முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா இருக்கும் போது தேர்தல் வாக்குறுதிகள்தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும். இவர்கள் மறைவிற்குப் பிறகு தேர்தல் வியூக நிபுணர்கள்தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறார்கள்.
2026 சட்டசபை தேர்தலுக்காக அதிமுக – & திமுக இரண்டும் தீவிரமாக தயாராக தொடங்கி உள்ளன. இதில் இரண்டு கட்சிகளும் தேர்தல் வியூக ஆலோசனை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது.
அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. கடைசியாக கடந்த லோக்சபா தேர்தலில் 10 வது முறையாக தோல்வி அடைந்து உள்ளது.
இந்த நிலையில்தான் அதிமுக பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளதாம். பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தில் பிரஷாந்த் கிஷோர் இப்போது வெளிப்படையாக பணிகளை செய்வது இல்லை. அவரின் நிறுவனம் மட்டுமே பணிகளை செய்கிறது. அந்த நிறுவனத்தின் நிறுவனர் இப்போதும் பிரஷாந்த் கிஷோர்தான்.
அவர் நேரடியாக பணிகளை செய்ய மாட்டார். ஏனென்றால் அவர் தனியாக அரசியல் கட்சி நடத்தி வருகிறார். ஆனாலும் பிரஷாந்த் கிஷோர்தான் தேர்தல் திட்டங்களை ஐபேக் நிறுவனத்திற்காக வகுத்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் அந்த நிறுவனத்துடன் எடப்பாடி பழனிசாமி ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே இதற்கான ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அடுத்ததாக திமுகவும் ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய உள்ளதாம். அதன்படி மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவுடன் வேலை பார்த்தShowtime (ஷோ டைம்)நிறுவனத்துடன் திமுக ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷோ டைம்நிறுவனம் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவுடன் வேலை பார்த்தது. அங்கே சிவசேனாவுடன் இரண்டு பிரிவுகள் இடையே கடுமையான மோதல் நிலவியது. அதிலும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா பிரிவே வலிமையாக இருந்தது. அதை மீறி ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவுடன் வேலை பார்த்து அந்த கட்சியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அந்த நிறுவனத்துடன் ஆளும் திமுக ஆலோசனை செய்து வருகிறதாம்.
இதே அமைப்புதான் ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கு சந்திரபாபு நாயுடுவிற்காக பணியாற்றியது. அங்கேயும் சந்திரபாபு நாயுடு வெற்றிபெற இந்த அமைப்பு காரணமாக இருந்தது. இதே குழுவுடன்தான் இப்போது திமுக ஆலோசனை செய்து வருகிறதாம். விரைவில் ஒப்பந்தமாகும். ஏற்கனவே பி.கே. டீமில் வேலை பார்த்த பலர் ‘மாப்பிள்ளை’ டீமில் வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது-.