மக்களவைக்குள் சென்ற தன்னை தடுத்து நிறுத்தி கேள்வி எழுப்பிய சிஐஎஸ்எப் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜ்யசபா தலைவருக்கு திமுக எம்பி எம் எம் அப்துல்லா புகார் கடிதம் எழுதியுள்ளார்.

மக்களவை கட்டிடத்திற்குள் சென்ற திமுக மாநிலங்களவை உறுப்பினரை தடுத்தி நிறுத்திய சிஐஎஸ்எப் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எம்.அப்துல்லா கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசு தலைவருமான ஜெகதீப் தங்கருக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் எழுதியுள்ள புகார் கடிதத்தில், நேற்றைய தினம் 18/06/2024 பாராளுமன்ற கட்டிடத் வளாகத்தில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான சம்பவத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

மதியம் 2.40 மணியளவில், நான் பார்லிமென்ட் ஹவுஸ் தோட்டத்திற்குள் நுழைந்தபோது சிஐஎஸ்எப் பணியாளர் என்னை நிறுத்தினார். அப்போது மக்கள் மற்றும் தமிழக அரசின் நலன்களை நான் பிரதிநிதித்துவப்படுத்தும் இடமான நாடாளுமன்றத்திற்கு நான் சென்றதன் நோக்கம் குறித்து என்னிடம் கேள்வி எழுப்பிய சிஐஎஸ்எப் பணியாளர்களின் இந்த நடத்தையால் தான் அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார்.

பாதுகாப்பு பொறுப்பில் இருந்தவர்களால் இது போன்று இதற்கு முன்பு தவறாக நடத்தியதில்லையெனவும் தெரிவித்துள்ளார். மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்ட நிகழ்வுகள் ஏதும் இல்லாவிட்டாலும் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்க முடியும் என நான் உறுதியாக நம்புகின்றேன்,

எனவே சிஐஎஸ்எஃப் பணியாளர் என்னை விசாரித்த விதத்தை என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை, அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மாநிலங்களவை மற்றும் அதன் உறுப்பினர்களின் பாதுகாவலர் என்ற முறையில், சிஐஎஸ்எஃப் பணியாளர்களின் இந்த முன்னோடியில்லாத தவறான நடத்தையை உணர்ந்து, தவறு செய்த பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மாநிலங்களவை மற்றும் அதன் உறுப்பினர்களின் கண்ணியத்தை நிலைநாட்டவும் கேட்டுக்கொள்வதாக எம்.எம்.அப்துல்லா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal