பிரதமர் பதவியை நரேந்திர மோடி ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் வழங்கினார்.

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

மத்தியில் ஆட்சியமைப்பதற்கு 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் பதவியை நரேந்திர மோடி ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கினார். ராஜினாமா கடிதத்தை மோடி வழங்கியபோது, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர். “மோடியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர், புதிய அரசாங்கம் பதவியேற்கும் வரை நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் குழு ஆட்சியை தொடருமாறு கேட்டுக் கொண்டார்.” என இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நரேந்திர மோடி வருகிற 8ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனித்து 240 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவு இருப்பதால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியால் ஆட்சியமைக்க முடியும். பிரதமர் மோடி விரைவில் ஆட்சியமைக்க குடியரசு தலைவரிடம் உரிமை கோருவார் என தெரிகிறது.

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் பட்சத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் இரண்டாவது தலைவர் என்ற பெருமையை மோடி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal