‘‘இந்தியா கூட்டணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டதால் கூட்டணிக்கட்சி தலைவர்களுடனான கூட்டத்திற்கு சென்று நேரத்தை வீணடிக்க வேண்டாம் என முதல்வர் டெல்லி செல்லவில்லை’’ என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பாரதிய ஜனதா கட்சிக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் மக்கள் ஒரு பெரிய ஆதரவை கொடுத்துக் கொண்டிருப்பதை இந்தியா முழுவதும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நடத்த இருக்கிறார்.

நாடு முழுவதும் மக்கள் எங்கு பார்த்தாலும், எங்கு சென்றாலும் மோடி மோடி என்று பெரிய ஆதரவு அலைகளை கொடுக்கிறார்கள். நம் தேசத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் சென்ற மோடியை மக்கள் பாராட்டுகிறார்கள். மூன்றாவது முறையாக மோடியின் ஆட்சி 400 தொகுதிகளில் வெற்றி பெறுவது நிச்சயிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தியானம் செய்வது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் பேசுவது குறித்து பதில் அளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,

நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும்? நம் நாட்டின் நன்மைக்காக தியானம் செய்கிறார் பிரதமர் மோடி. சிறு வயது முதல் ஆன்மீகத்தில் மிகவும் பற்று கொண்டவராக பிரதமர் மோடி இருந்திருக்கிறார். கடந்த வருடம் கூட இமயமலையில் தியானம் மேற்கொண்டார். தற்போது மூன்று நாட்களாக பிரதமர் மோடி முனிவர் போல கடும் தவம் செய்து வருகிறார். காங்கிரஸ் இந்தியா, கூட்டணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டது. காங்கிரஸ் கூட்டணி 100 சீட் கூட தாண்ட மாட்டார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ஜெயிலுக்கு போகிறார்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காங்கிரஸ் கூட்டத்திற்கு எங்கும் செல்ல மாட்டார். காங்கிரஸ் கூட்டணியால் எந்த பிரயோஜனமும் இல்லை. நாங்கள் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளை பெறுவோம். மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் 15 லட்சம் பணத்தை பிரதமர் மோடி தருவாரா என்று குறித்த கேள்விக்கு பதில் அளித்த எல்.முருகன். 15 லட்சம் தருகிறேன் என்று பிரதமர் மோடி இதுவரை சொல்லவே இல்லை. இது எதிர்க்கட்சிகளால் கட்டமைக்கப்பட்ட கட்டுக் கதையாகும். அதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளது ஹிந்தி தெரியாதவர்கள் ஹிந்தி படிக்க வேண்டும்.

ஏற்கனவே கருப்பு பணம் வைத்திருந்தவர்கள், ஊழல் செய்தவர்கள் எல்லாம் சிறையில் இருக்கிறார்கள். பிரதமர் மோடி அவர்களின் அடுத்த ஆட்சியில் ஊழல் என்பதே இல்லாமல் இருக்கும். கருப்பு பணம் என்பது முற்றிலும் இல்லாமல் அழிக்கப்படும். கருப்பு பணத்திற்கு இந்தியாவில் இடமில்லை. டிஜிட்டல் டிரான்ஸ்பர் சாதாரண மக்களையும் சென்று சேர்ந்து இருக்கிறது. இதுதான் பிரதமர் மோடியின் முன்னெடுப்பு.

திமுகவின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் பாஜகவின் கூட்டணியாக இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். நடிகர் பிரகாஷ்ராஜுக்கும், தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? பிரகாஷ்ராஜ் ஒரு கர்நாடகா நடிகர். அவ்வளவு தான். அவருடைய கருத்துக்களை நாம் இங்கே பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய இணைய அமைச்சர் எல் முருகன் தெரிவித்தார். பின்னர் மதுரையில் இருந்து பழனி முருகன் கோயிலுக்கு சென்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal