நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடி ஜூன் 1ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார். அதே நேரத்தில் இண்டியா கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளார்.

இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. 6 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், இறுதி கட்ட தேர்தல் வருகிற ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது.

இந்தநிலையில் நாளை மறு தினத்தோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடையவுள்ள வாக்கு எண்ணிக்கையை ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர். இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி வரும் வியாழக்கிழமை (மே 30 ஆம் தேதி) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி படகு மூலம் விவேகானந்தர் நினைவு பாறைக்கு சென்று தியான மண்டபத்தில் தியானம் செய்யவுள்ளதாக பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் நடைபெறவுள்ள இண்டியா கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்லவுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ம் தேதி வெளியாக உள்ள நிலையில் ஜூன் 1ஆம் தேதி இண்டியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பங்கேற்க இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள 28 கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டத்தில் இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் செயலாற்றியது குறித்தும், வெற்றி வாய்ப்பு குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும் முக்கியமாக தேர்தல் முடிவுக்கு பின் இந்தியா கூட்டணி எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது பற்றியும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். ஜூன் 1 தேதி காலை 7 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal