சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அவரது தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதோடு, ‘எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது’ என ஒரு நீதிபதி கூறியதுதான் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை பெண் அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக கடந்த மே 4 அன்று, யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை போலீஸார் தேனியில் வைத்து கைது செய்தனர். கஞ்சா வைத்திருந்ததாகவும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக்கூறி சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே 12 அன்று உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்க வேண்டும் எனக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘போலீஸார் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் எனது மகன் மீது அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளை சட்டவிரோதமாக பதிவு செய்து ஒவ்வொரு நீதிமன்றமாக ஆஜர்படுத்தி வருகின்றனர். காவல்துறையால் தாக்கப்பட்டதால் கை மற்றும் பல்வேறு இடங்களில் காயம்பட்டுள்ள எனது மகனுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை. போலீஸாரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக எனது மகன் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எனது மகன் ஒருபோதும் செயல்படவில்லை. சட்டப்படியான நடைமுறைகளை பின்பற்றாமல் எனது மகனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதமானது. பழிவாங்கும் நோக்குடன் உள்நோக்கம் கொண்டது என்பதால் அதை ரத்து செய்து எனது மகனை விடுவிக்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் நேற்று பிற்பகல் 2:15 மணிக்குள் தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டனர். அதன் படி நேற்று அசல் ஆவணங்கள் நீதிபதிகளிடம் கொடுக்கப்பட்டது. அதனை இரு நீதிபதிகளும் ஆராய்ந்தனர்.

அதன் பிறகு நீதிபதிகள், ‘இனி எதிர்காலத்தில் சவுக்கு சங்கர் எப்படி நடந்து கொள்வார்..? எதையெல்லாம் செய்யமாட்டார்..,’ என எழுத்துப் பூர்வமாக கொடுக்கவேண்டும் என உத்தரவிட்டு, இன்றைக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று மதியம் சவுக்கு சங்கர் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பில், ‘‘இந்த மனுவை இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அதிகாரம் மிக்க நபர்கள் இந்த வழக்கு தொடர்பாக என்னை சந்தித்து கேட்டுக்கொண்டனர்.

இதன் காரணமாகவே இந்த வழக்கை அவசரமாக விசாரித்தேன். சவுக்கு சங்கர் விவகாரத்தில் முறையான விதிமுறைகளை பன்பற்றாமல் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. எனவே சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுகிறது’’ என்று அதிரடியாக தீர்ப்பை அளித்தார்.

நீதிபதி பி.பி.பாலாஜி அளித்த தீர்ப்பில், ‘‘இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளித்த பிறகு வழக்கை விசாரிக்கலாம்’’ என்று உத்தரவிட்டார்.

இரு நீதிபதிகளும் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்ட வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளதால், இந்த வழக்கை மூன்றாவது தனி நீதிபதி அமர்வுக்கு மாற்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் பரிந்துரை செய்துள்ளார்.

இதற்கிடையே சவுக்கு சங்கரை கோவை சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்ற இருநீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal