அதிமுக பாமக இடையே கூட்டணி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், அதிமுக தொகுதி பங்கீட்டு குழு நிர்வாகிகள் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் உட்பட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு கடந்த இரண்டு வாரங்களாக பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதில், தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பாமகவுடன் இதுவரை ரகசியமாகவே பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதிமுக இதுவரை உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் 7 மக்களவை தொகுதி கொடுக்க தயாராக இருக்கும் அதிமுக மாநிலங்களவை தொகுதி ஒதுக்க முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டது. மறுபுறம் பாமக கேட்கும் தொகுதிகளை தேமுதிக கேட்பதாலும் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவினர் சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி உடன் ஆலோசனை நடத்தியது. ஆலோசனையில் கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் 4 மணி நேரம் நீடித்த ஆலோசனையில், தேமுதிக புதிய தமிழகம் கட்சி உடனான பேச்சுவார்த்தையில் பேசப்பட்டவை குறித்தும், பாமக உடனான பேச்சுவார்த்தை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal