ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட திமுக முன்னாள் அமைச்சர் சற்குணம் பாண்டியன் மருமகள் சிம்லா முத்து சோழன் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.சற்குணபாண்டியன், இவர் திமுக துணை பொதுச்செயலாளராகவும் இருந்தார். ஆர்.கே. நகரில் சற்குணபாண்டியன் பலமுறை வெற்றிபெற்றுள்ளார். இதனைடுத்து 2016ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா களம் இறங்கினார். இவருக்கு டப் கொடுக்க எஸ்.பி.சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன் களம் இறக்கப்பட்டார். இவரும் ஆர்.கே.நகர் தொகுதியை சுற்றி சுற்றி வந்தார்.

ஒரு தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டால் வெற்றி வித்தியாசம் 50ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும். ஆனால் சிம்லா முத்து சோழனில் களப்பணியால் 30ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலையே ஜெயலலிதா வெற்றி பெற்றார். ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டதால், சிம்லா முத்துச்சோழன் தமிழகம் முழுவதும் பிரபலமானார்.

அடுத்தடுத்த தேர்தல்களில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த் சிம்லா முத்து சோழனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சற்குண பாண்டியன் மறைவுக்கு பின் கட்சியில் உரிய மரியாதை கிடைக்காத நிலை ஏற்பட்டது.இதனையடுத்து கட்சி பணியில் இருந்து சற்று விலகி இருந்தவர் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார்.

தி.மு.க.வில் அண்ணா, கலைஞர் காலத்தில் இருந்து வாழையடி வாழையாக இருக்கும் பல மகளிர் அணி நிர்வாகிகள் மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி அறிவாலயத்தில் உள்ள மூத்த உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து வந்த விஜிலா சந்த்தியானந்துக்கு வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க. பொதுச் செயலாளரை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச் சோழன் போன்றோர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், கலைஞர் காலத்தில் தி.மு.க.வில் உள்ள மகளிர் நிர்வாகிகளுக்கு உரிய முக்கியத்துவமும், அங்கீகாரமும் கொடுக்கப்பட்டது. ஆனால், மு.க.ஸ்டாலின் தலைமையிலான கட்சியிலும், ஆட்சியிலும் மகளிருக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கக் குரல் எழ ஆரம்பித்திருக்கிறது.

கலைஞர் இருக்கும் போது, உட்கட்சி பூசலை எல்லாம் கருத்தில் கொண்டு, அதனால் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகிகளுக்கு உரிய முக்கியத்தும் கொடுத்து, அவர்களின் மனக் காயத்திற்கு மருந்து கெடுப்பார். ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் எதையுமே கண்டுகொள்வதில்லை என்ற ஆதங்கம் தி.மு.க.விற்கு உண்மையாக உழைக்கும் மகளிருக்கு ஏற்பட்டிருக்கிறது’’ என்றனர்.

தி.மு.க.வில் மனவருத்தத்தில் இருக்கும் மகளிர் நிர்வாகிகளுக்கு மருந்து கொடுப்பாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal