‘ஆண்டாண்டு காலமாக, தரம் தாழ்ந்த மொழியில் மட்டுமே பேசிப் பழகிய திமுகவினருக்கு, எங்கள் பகுதியின் வழக்கு மொழி தவறாகத் தெரிவதில் வியப்பில்லை’ என கனிமொழிக்கு அண்ணாமலை காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.

அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உதயநிதி ஸ்டாலினின் பேட்டியைப் பார்த்தேன்… ‘‘பார்த்து பக்குவமாக பல்லு படப் போகிறது என்று சொல்வார்கள். அதுபோலவே நட்பு ரீதியிலான கேள்விகளை நெறியாளர் எழுப்பி இருந்தார்’’ என்று தெரிவித்தார்.

அண்ணாமலை பேசியது இரட்டை அர்த்தத்தில் இருந்ததாக கடும் விமர்சனங்கள் மற்றும் கண்டன குரல்கள் எழுந்தன. ஆனால், தனது ஊர் வட்டார வழக்கில்தான் அவ்வாறு பேசியதாகவும் மன்னிப்பு கேட்க முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். எனினும் அண்ணாமலையின் கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

இதுதொடர்பாக திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- ‘‘அண்மையில் பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு மாநிலத்தின் அமைச்சர் குறித்தும், மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்தும் தரம் தாழ்ந்த வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தொடர்ந்து இவ்வாறு ஒருவர் பேசிவருவது அரசியலின் தரத்தையே தாழ்த்துகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கனிமொழிக்கு தரக்குறைவான பேச்சு பற்றி அறிவுரை கூறும் தகுதி உங்களுக்கு இல்லை என அண்ணாமலை காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- ‘‘ஆண்டாண்டு காலமாக, தரம் தாழ்ந்த மொழியில் மட்டுமே பேசிப் பழகிய திமுகவினருக்கு, எங்கள் பகுதியின் வழக்கு மொழி தவறாகத் தெரிவதில் வியப்பில்லை. உங்கள் தந்தை, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதற்கொண்டு திமுக தெருமுனைப் பேச்சாளர்கள் வரை பேசும் தரக்குறைவான பேச்சை விட எந்தக் காலத்திலும், யாரும், யாரையும் தரக்குறைவாகப் பேசிவிட முடியாது.

அப்படி ஒரு கட்சியில் இருந்து கொண்டு, தரக்குறைவான பேச்சு பற்றி அறிவுரை கூறும் தகுதி உங்களுக்கு இல்லை. எந்தவிதத் தகுதியும் அற்றவர்களுக்கு, வெற்று விளம்பரம் மூலம் ஒரு பிம்பம் கட்டமைக்க முயல்பவர்களை, பொதுச் சமூகம் இப்படித்தான் எதிர்கொள்ளும் என்பதை நீங்கள் புரிந்து கொள்வது நலம்’’ என அண்ணாமலை கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal